பலே பஞ்சாயத்து! நிலை குலைய வைத்த பதில்!

“ஏம்ப்பா… நானே அனுபவிச்சுருக்கேன். அந்த பையன் சொல்றதுல உண்மையிருக்கும்யா…” என்று ஒரு பஞ்சாயத்து நடுவரே திடீர் சாட்சியாக மாறி கருத்துச் சொன்னால், அதற்கப்புறம் அப்பீல் ஏது? அப்படியொரு பதில் வந்ததால், முறையிடப் போன டிஆரும், முறைக்குள் சிக்கிய பாண்டிராஜும் ஒரே நேரத்தில் இன்ப துன்பம் ஆனார்களாம். பஞ்சாயத்து நடந்த இடம் தயாரிப்பாளர் சங்கம் என்றால் சட்டென்று வேர் எது? வெந்நீர் எது? என்று புரிந்திருக்கும் உங்களுக்கு! யெஸ்… கடந்த சில வாரங்களாகவே இது நம்ம ஆளு பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்தில் காது கிழிபடுகிற அளவுக்கு நடந்து வருகிறது.
இங்குதான் இந்த படத்தின் பட்ஜெட் எட்டுகோடி என்று ஒரு கணக்கை எடுத்து வைத்திருக்கிறார் டைரக்டர் பாண்டிராஜ். “ஏங்க நியாயமாரே… நீங்களே சொல்லுங்க. இந்த படத்தை நீங்களும்தானே பார்த்தீங்க? எட்டுகோடி செலவு செஞ்ச மாதிரியா இருக்கு?” என்று டிஆர் முறைக்க, அந்த இடத்தில் பஞ்ச் வைத்த பாண்டிராஜின் பதில்தான் அந்த நடுவரை சேம் சைட் கோல் போட வைத்ததாம். அப்படியென்ன சொன்னார் பாண்டி?
“சார் நடுவுல ஷுட்டிங் கேன்சல் ஆன நாளெல்லாம் கணக்கு போட்டு பாருங்க. நான் யூனிட் மொத்தத்தையும் வரவழைச்சு சிம்புவுக்காக காத்திருப்பேன். அவர் வரமாட்டார். ஆனால் ஈவினிங் அவ்ளோ பேருக்கும் பேட்டா, மதியான சாப்பாடு, சாயங்கால டிபன், லொக்கேஷன் சார்ஜ் எல்லாத்தையும் கொடுத்துதான் அனுப்பியிருக்கேன். இப்படி கேன்சல் ஆன நாள் பணத்தையெல்லாம் கூட்டிப் பாருங்க. அதுவே பல கோடி வரும்” என்றாராம். சட்டென்று குறுக்கே புகுந்த அந்த தயாரிப்பாளர், “ஆமாம்ப்பா… நானே சிம்புவை வச்சு படம் தயாரிச்சிருக்கேன். 200 நாளுக்கு மேல பேட்டா கொடுத்து, தொழிலாளர்களுக்கு சாப்பாடு போட்டு, லொக்கேஷன் சார்ஜ் கொடுத்து ஷுட்டிங்கை கேன்சல் பண்ணியிருக்கேன். அந்த வலி எனக்கு நல்லாவே புரியுது” என்றாராம் பஞ்சாயத்து பார்ட்டி.
எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பூமிய பொளந்துகிட்டு ஒரு செடி வளருது! வளருது… வளருது… இன்னும் வளர்ந்துகிட்டேயிருக்கு?
