நயன்தாராவின் ஓரவஞ்சனை! சினிமா ஏரியாவில் முணுமுணுப்பு
அறம் படம் ஒன்று போதும். ஆயுளுக்கும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நயன்தாராவுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த பெயரும் புகழும் வேறு யாருக்கும் எளிதில் வாய்க்காத தங்கப் பதக்கம். கலெக்டருக்குண்டான அத்தனை கம்பீரமும் நயன்தாராவுக்கு அப்படியே பொருந்திப் போக… “கலெக்டரம்மா…” என்று இவர் போகிற இடமெல்லாம் கை கூப்புகிறது ஊர். இந்த சந்தோஷத்தை இன்னும் இன்னும் என்று அனுபவிக்க தயாராகிவிட்டார் அவரும்.
தன் சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில் நேற்று தியேட்டர் விசிட் அடித்தார் நயன். முதலில் காசி, அப்புறம் உதயம், அதற்கப்புறம் கமலா என்று ஒவ்வொரு தியேட்டராக நயன்தாரா செல்ல, ஒவ்வொரு தியேட்டரும் உற்சாகத்தால் மிதந்தது. மக்களின் ரீயாக்ஷனை நேரடியாக கண்டு களித்த நயன்தாரா முகத்தில் கொள்ளை கொள்ளையாக சந்தோஷம்.
இந்த விசிட்டை இதோடு நிறுத்திக் கொள்ளப் போவதில்லையாம் அவர். தமிழகத்தையே ஒரு சுற்று சுற்றிவிடவும் திட்டமிட்டிருக்கிறாராம். இந்த நேரத்தில்தான் அந்த முணுமுணுப்பு. “இதுவரைக்கும் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார் அவர். அப்போதெல்லாம் புரமோஷன்கள் எதற்கும் வராதவர், இப்போது அவரது மேனேஜர் படம் என்றதும் வருகிறாரே…? அந்த மேனேஜர் கூட இவரது பினாமி என்கிறார்களே, அது உண்மையாக இருக்குமோ?” இப்படியெல்லாம் பேச ஆரம்பித்த கோடம்பாக்கத்தின் வாயை மூடுகிற வல்லமை நயன்தாராவுக்கு மட்டுமல்ல… யாருக்கும் இயலாத காரியம்.
இப்பவாவது இது நடந்ததே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு ஏனிந்த புலம்பல்?