ஊருக்குள்ள பிரச்சனைன்னா சிம்பு குரல் கொடுப்பார்! சிம்புவுக்கு பிரச்சனைன்னா?
வட்ட வடிவில் தோசை ஊற்றினாலும், அது வகை தொகையில்லாத கொத்து பரோட்டாவாக மாறினால், அந்த கிச்சனும் தோசைக்கல்லும் சிம்புவுக்கு சொந்தமானது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். கெரகம் அப்படியொரு திசையில் நின்று வணக்கம் போடுகிறது சிம்புவுக்கு.
‘அந்த சிம்பு உசிரோட இல்ல. இப்ப வேற சிம்பு பொறந்துட்டான்’ என்று அவரே வந்து சத்தியம் செய்தாலும், ‘அப்படியெல்லாம் இருக்காது?’ என்று டவுட் படுகிற அளவுக்கு இருக்கிறது அவரது முன் கதை சுருக்கம். இருந்தாலும் சிம்பு இப்போது சின்சியர் ஹீரோ. அதிகாலை ஆறு மணி ஷுட்டிங்கை கூட அவரை நம்பி வைக்கலாம் என்கிற அளவுக்கு உடம்பும் மனசும் அவரது சொல்பேச்சு கேட்க ஆரம்பித்துவிட்டது.
சுந்தர்சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வரும் சிம்பு 90 சதவீத படப்பிடிப்பை முடித்தும் விட்டார். பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இதில்தான் கடும் அப்செட் பலரும். அந்த படத்திற்கு ரெட் போட்டுவிட்டார்கள். மைக்கேல் ராயப்பனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட நஷ்டத்தை சிம்பு கொடுத்தால்தான் இந்த ராஜாவுக்கு கதவு திறக்கும் என்று கூறிவிட்டார்கள். விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு சிம்பு ரசிகர்கள் காட்டு காட்டென்று காட்டி வருகிறார்கள்.
முடிஞ்சா எங்க தலைவன் படத்தோட மோதிப் பாரு என்றெல்லாம் விஷாலை சவாலுக்கு இழுத்து வருகிறார்கள்.
இவ்வளவு பெரிய களேபரம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் சினிமாவை சேர்ந்த யாரும் சிம்புவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சர்கார் பட போஸ்டரில் விஜய் சிகரெட் குடிப்பது போன்ற ஸ்டில்லுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவருடன் வாதாட தயார் என்று விஜய்க்கு ஆதரவு காட்டினார் சிம்பு. ஆனால் இவருக்கு ஒரு பிரச்சனை என்றபோது, ஆஃப்த லைனில் வந்தாவது விஜய் ஆறுதல் சொல்லலாம். விஷாலிடம் பேசலாம். ஆனால் விஜய் மட்டுமல்ல, சிம்பு நம்பிய எவரும் மவுத் ஷட்டவுன் பொசிஷனுக்கு போய்விட்டதுதான் கொடுமை.
விஜய் தலையே சர்கார் விஷயத்தில் சாரிடானுக்கு ஏங்குது. இதுல சிம்பு தலைக்கு வேறு அயொடெக்ஸ் தேய்ச்சு விடுவாராக்கும்? போங்கய்யா நீங்களும் உங்க எதிர்பார்ப்பும்!