சிம்புவுக்காக இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்தாரா பாண்டிராஜ்?
புள்ளி வைக்கும் போதே, கோலம் கோணையாதான் வரும் என்பதை அறியாதவரல்ல பாண்டிராஜ்! இருந்தாலும் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் திங்கிற மாதிரி என்று நினைத்திருக்கலாம். இது நம்ம ஆளு படத்தை சிம்புவை வைத்து துவங்கினார். “இந்த படத்தை ஒரே நாள்ல தமிழ்நாடு முழுக்க பேச வைக்கணும் சிம்பு…” என்று எடுத்த எடுப்பிலேயே கூறிய பாண்டிராஜ், “உங்களுக்கு ஜோடியா நயன்தாராவை நடிக்கக் கேட்கலாமா?” என்று கேட்க, முகமெல்லாம் முள்ளங்கி பத்தையானார் சிம்பு. “முடியுமா? நடக்குமா?” என்றெல்லாம் சிம்புவே சந்தேகப்பட, பாண்டிராஜ் மட்டும் கான்பிடன்ட்டாக நயன்தாராவுக்கு போன் அடித்தார். என்ன ஆச்சர்யம். பழம் நழுவி நாக்கில் விழுந்தது ஸ்ட்ரெயிட்டாக. எல்லாம் சுபமஸ்து!
இப்படி ஓப்பனிங் கிராண்டாக இருந்தாலும், எண்ட் அவ்வளவு சுபமாக இல்லை அவருக்கு. தன் கைக் காசை போட்டு படத்தை எடுத்த வகையிலும், முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்து கொடுத்த வகையிலும் சுமார் ஐந்து கோடிக்கும் மேல் பாக்கியாம் சிம்பு தரப்பிடமிருந்து. பலமுறை இது சம்பந்தமான பேச்சு வார்த்தைக்கு போன பாண்டிராஜ், சிம்பு நல்லவருங்க. ஆனால் அவங்க வீட்லதான் யாரும் நல்லவங்க மாதிரி தெரியல என்று நடு ராத்திரியிலேயும் எழுந்து புலம்ப ஆரம்பித்தார். ட்விட்டரில் வந்து அவர் போட்ட கமென்ட்டுகள் எல்லாமே சிம்புவின் குடும்ப புகழுக்கு கோடாலியாய் இருந்ததை நாடறியும்.
கட்… ஏப்ரல் மாதம் இது நம்ம ஆளு படத்தை வெளியிட முன்னேற்பாடுகள் செய்து வருகிறார் சிம்பிவின் அப்பா டி.ஆர். பாண்டிராஜ் தன் கடனை விட்டுக் கொடுத்தால்தான் இந்த படத்தின் டெபிசிட்டிலிருந்து ஓரளவுக்காவது தப்பிக்க முடியும். நடுவில் ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனமும், இப்படத்தின் ரிலீசுக்கு கட்டையை கொடுக்க… நொந்து போன டி.ஆர், தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து பண்ணி வருகிறார். இதையெல்லாம் கண் கூடாக பார்த்த பாண்டிராஜ், தனது பணத்திலிருந்து சுமார் இரண்டரை கோடியை விட்டுக் கொடுத்திருப்பதாக தகவல்.
நேற்று போர் பிரேம்ஸ் தியேட்டருக்கு ‘அப்பா’ என்ற படத்தின் பிரத்யேக காட்சிக்காக வந்திருந்த பாண்டிராஜிடம், “அப்படியா சார்?” என்றோம். அந்த படத்தை பற்றி எதுவுமே இப்ப பேச விரும்பல சார். நல்லபடியா ரிலீஸ் பண்ணட்டும். அதுதான் என்னோட ஒரே ஆசை என்று கழன்று கொண்டார். மனசார விட்டுக் கொடுத்தாலும், மந்தையில வச்சு சொல்ல முடியாதளவுக்கு ஏதோ ஒரு சங்கடம் அவருக்கு. இருக்கட்டும்… இருக்கட்டும்…