விஷாலுக்கு சப்போர்ட் செய்த கமலுக்கு மேடையிலேயே குடமுழுக்கு நடத்திய ராதாரவி!

இருவேறு கருத்துள்ளவர்கள் ஒரு மேடையில் ஏறினால், ஜாடை பேச்சுக்கு துளி கூட குறைவிருக்காது. அதுவும் ராதாரவி மாதிரியான துணிச்சல் நடிகர்கள், வாயை திறந்தால் நெருப்புத் துண்டுகளை கக்கிவிட்டு போவார்கள். கக்கியது நெருப்பா, பனிக்கட்டியா என்பதே தெரியாதளவுக்கு இருக்கும் அந்த பேச்சு. ஆனால் தொட்டால் சுடும். நேற்றும் அப்படி சில நெருப்புத் துண்டங்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனார் ராதாரவி. இடம் – சங்கிலி புங்கிலி கதவை திற படத்தின் பாடல் வெளியீட்டு விழா.
விழாவுக்கு வந்திருந்தார் கமல். இந்தப்படத்தின் இயக்குனர் அய்க், பிரியர்தஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதற்கப்புறம் கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக வொர்க் பண்ணியிருக்கிறார். தன் சிஷ்யனை பாராட்டுவதற்காக வந்திருந்தார் கமல். “நான் எல்லாருடனும் சேர்ந்து ஒரு தடவ இந்த ட்ரெய்லரை பார்க்கணும். இன்னொரு முறை போடச் சொல்லுங்க” என்று கமல் சொன்னதெல்லாம் சிஷ்யனை மார்க்கெட் பண்ணுகிற டெக்னிக்.
எம்.ஆர்.ராதாவின் பேரன்தான் இந்த அய்க். அப்படியென்றால் ராதாரவி இல்லாமலா? தியேட்டரே குலுங்குகிற அளவுக்கு நகைச்சுவையால் பின்னி எடுத்தார் ராதாரவி. “என் பையனை சினிமாவுக்கு வாடான்னா வர மாட்டேங்குறான். இங்க நன்றி கெட்டவனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. அதனால்தான் அவன் சினிமான்னாலே ஓடுறான்” என்று ஆரம்பித்தவர், “கமல் எதற்கும் அழ மாட்டார். ஆனால் விஸ்வரூபம் சமயத்தில் அழுதார். அதை டி.வியில் பார்த்ததும் கட்டிய லுங்கியோடு ஓடுனேன்…” என்றவர், அப்படியே நைசாக கொண்டு வந்து நடிகர் சங்க தேர்தலை கோர்த்தார். “இந்த தியேட்டர் ஓனருக்கு (சத்யம் தியேட்டர் ) நன்றி சொல்லணும். ஏன்னா அவருதான் நல்லாயிருந்த நடிகர் சங்கத்தை ரெண்டா பிரிச்சார் ” என்று ஒரு நக்கல் விட்டாரே பார்க்கணும்…
இவருக்கு முன்பாக பேசிய கமல், அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணைக்கு தெர்மாக்கோல் போட்டு மூடியதை நக்கலடிக்கும் விதத்தில் சில கருத்துக்களை சொல்ல, அதை தொட்டு தொடர்ந்தார் ராதாரவி. “அப்படியே அந்தம்மா (ஜெ.) செத்தப்ப தெர்மோகோல் போட்டு மூடியிருந்தீங்கன்னா அவங்க ஆவி மேலே போயிருக்காது. நானெல்லாம் மேடையில பளிச்சுன்னு பேசுறவன். சில பேர் மாதிரி ட்விட்டர்ல பேசுறவன் இல்ல” என்றார்.
சமீபகாலமாக கமலின் ட்விட்டர் பக்கம்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், நடிகர் சங்கத்தை உடைத்து விஷால் அணி போட்டியிட காரணமானவர்களில் முக்கியமானவர் கமல் என்பதை தெரிந்தவர்களுக்கும், ராதாரவியின் பேச்சு ‘தெளிவாக’ புரிந்திருக்கும்!
வரவர சினிமா மேடைகள் அரசியல் மேடையை மிஞ்சுதேப்பா…!
