தற்கொலை வேண்டாம்! மாணவர்களுக்காக சூர்யா உருக்கம்!

24 படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் சூர்யாவின் பேச்சுதான் ஹைலைட்.
படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் கொடுத்த வரவேற்பு எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. நாங்கள் உழைத்த உழைப்புக்கான பலன் இது. வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அழகான பாதையை அமைத்து கொடுத்தது ரசிகர்கள் தான். “ சரியான படம் பண்ணினால் மட்டும் அந்த படத்தை வெற்றி பெற வைங்க , தப்பான படத்தை நான் பண்ணினா கூட என்னையும் ஆதரிக்காதிங்க , அப்படி தப்பான படத்தை நீங்க ஆதரிக்காம இருந்தால் தான் நாங்கள் நல்ல கதையை தேடி பிடித்து சிறந்த படத்தில் நடிக்க முடியும் , உங்களை மகிழ்விக்கவும் முடியும்.
இயக்குநர் விக்ரம் குமார் மிகச் சிறந்த இயக்குநர் , அவர் படத்தின் கதையை நான்கு மணி நேரம் என்னிடம் கூறி முடித்ததும் நான் கை தட்டி ரசித்தேன். படத்தின் கதையை கேட்க வேண்டும் என்று இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானிடம் நான் கூறியதும் , முதலில் அரைமணி நேரம் கதை கேட்க நேரம் ஒதுக்கிய இசை புயல் பின்னர் கதை பிடித்து போய் ஆறு மணி நேரம் கேட்டார். இப்படம் ஒரு லட்சிய படைப்பு என்று என்னிடம் கூறினார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் நாம் எந்த ஒரு விஷயத்தையும் பேசலாம் அவர் மிகப்பெரிய உச்சங்களை தொட்டும் எளிமையாக இருக்கிறார்.

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டத்தை பற்றி கேள்விப்பட்டதும் மிகவும் வருந்தினேன் , மனசு வலித்தது , எல்லாருக்கும் நேரம் இருக்கு , எல்லாருக்கும் நேரம் வரும். கல்லூரி படிக்கும் போது நானும் எதுவும் செய்யமால் இருந்தேன் , ஆனால் நான் இங்கு இப்படி நின்று பேசுவதற்கு காலம் தான் காரணம். இப்படத்தில் நான் முதன் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறேன் என்றார்.
இப்போதெல்லாம் எந்த விழாவில் கலந்து கொண்டாலும், அதில் சமூக நோக்கத்துடன் கூடிய ஒரு விஷயத்தை பதிவு செய்ய மறப்பதே இல்லை சூர்யா. மாணவர் தற்கொலை விஷயமும் அப்படிப்பட்டதுதான். பெற்றவர்கள் சொல்லி கேட்காத பிள்ளைகள் கூட ஹீரோக்கள் சொன்னால் கேட்கிறார்கள். அதனால் சூர்யாவுக்கும் அவரது பேச்சுக்கும் ஒரு வெல்கம்!
