சன் டி.வி முன் சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்! சிங்கம் பொங்கியது ஏன்?
எந்த வம்பு தும்புக்கும் போகாத ரசிகர்கள் என்றால், அது சூர்யாவின் ரசிகர்கள்தான். யாருடைய சட்டையை பிடித்தும் இழுக்காத அந்த கண்ணியவான்களையே கதற விட்டுவிட்டது சன் தொலைக்காட்சி. இன்று காலை சுமார் ஆயிரம் ரசிகர்கள், சன் குழுமத்தின் அலுவலக வாசலில் கூடி நின்று ஆர்ப்பாட்டம் நடத்துகிற அளவுக்கு போய் விட்டது நிலைமை. ஏன்?
கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் குழும சேனல் ஒன்றில் கிசுகிசு என்ற பெயரில் இரண்டு தொகுப்பாளிகள் பேசிக் கொண்டார்கள். அதில் அமிதாப்பச்சனுடன் சூர்யா நடிக்கவிருக்கும் விஷயத்தை சொல்லி கிண்டலடித்தவர்கள், அவரது உயரம் பற்றி சற்று மிகையாகவே பேசிவிட… வந்தது வினை. இது குறித்து கீ என்ற படத்தின் சினிமா மேடையில் பேசிய விஷால், ‘இப்படி தரம் தாழ்ந்து கிண்டல் செய்வது சரியல்ல’ என்று கூறி தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று சன் அலுவலகத்தை முற்றுகையிட்டுவிட்டார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ஆனால் இது குறித்து ட்விட் செய்திருக்கும் சூர்யா, ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நேரத்தையும் சக்தியையும் பயனுள்ள விஷயங்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற…’ என்று கூறியிருக்கிறார்.
ஆமென்!

