யுவன் விஷயத்தில் இப்படி ஓப்பனா போட்டு உடைச்சுட்டாரே சுசீந்திரன்?
சின்ன இசைஞானி திடீர் திடீரென காணாமல் போய்விடுவதாக கதற ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். நல்ல இசை தேடி அலையும் அத்தனை பேரும் யுவன்சங்கர் ராஜாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்காததால் தவியாய் தவிப்பதாக தகவல் அறிவிக்கிறது அதே கோடம்பாக்கம்.
யூத்தா இருக்கணும். படக்குன்னு புடிக்கணும். இவ்விரு கண்டிஷன்களுக்கும் பொசுக்கென அடங்கிவிடுகிற அற்புதம் யுவன் இசைக்கு இருக்கிறது. ஆனால் மனுஷன் சிக்கினால்தானே? அவரை ரீச் செய்வதற்குள் உள்ளங்கால் ரேகை உருத் தெறியாமல் போயிடும் போலிருக்கே என்கிறார்கள். புதிய இயக்குனர்கள் சொன்னால் பரவாயில்லை. புகழ் பெற்ற இயக்குனர்களே சொல்வதுதான் ஷாக்.
யுவனுடன் பல படங்களில் பணியாற்றிய சுசீந்திரனுக்கே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதை வருத்தத்தோடு தெரிவித்தவர், வேறு ஒரு இசையமைப்பாளருடன் சேர்ந்து பணியாற்றியதை யாவரும் அறிவர். தற்போது சுசீந்திரன் இயக்கிவரும் ஜீனியஸ் படத்திற்கு யுவன்தான் இசை.
இப்போது மட்டும் எப்படி சிக்கினார் யுவன்? இந்த கேள்வியை சுசீந்திரனிடம் கேட்டோம்.
“நான் எங்கே ரீச் பண்ண முடிந்தது? என் படத்தின் ஹீரோ ரோஷன்தான் அவரை எப்படியோ தேடிக் கண்டுபிடித்தார். யுவனை நான் மீட் பண்ணியப்போ, ‘உங்களை ரீச் பண்ண முடியல. மேனேஜரை மாத்திட்டீங்க, மேனேஜர்ட்ட சொன்னா சரியான பதில் இல்ல. சரி வேற யார் மூலமாவது உங்களிடம் பேசிடலாம்னு நினைச்சா, உங்களிடம் வொர்க் பண்ணிய யாருமே இப்போ உங்ககிட்ட இல்ல’ என்று வெளிப்படையா சொல்லிட்டேன். அதையும் சிரித்துக் கொண்டே காதில் வாங்கிக் கொண்டார் என்கிறார் சுசீந்திரன்.
உருப்படியா ட்யூன் போடுற ஒண்ணு ரெண்டு பேரும் இப்படி பம்மாத்து காட்டுனா, தமிழ்சினிமா பாடல்கள் நாய் குலைக்கும் எபெஃக்ட்டில் அமைவதை எவரால் தடுக்க முடியும்?
சொல்லுங்க குட்டி ஞானி?

