முன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு?
எந்த நேரத்தில் எலி என்று பெயர் வைத்தார்களோ? கஜானாவை கடித்துத் துப்பிவிட்டது அப்படம். வடிவேலுவின் வேகமான பயணத்தை பள்ளம் தோண்டி பாழ் படுத்திய படங்களின் லிஸ்ட்டில் எலிக்கு முக்கியமான இடமுண்டு. அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனரல்ல. தயாரிப்பாளரல்ல. எல்லாம் எனக்குத் தெரியும் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்த வடிவேலுதான்.
இன்னும் சொல்லப் போனால், அப்படத்தை இயக்கியதே வடிவேலுதான் என்கிறார்கள் இப்பவும். போகட்டும்… லேட்டஸ்ட் விஷயத்திற்கு வருவோம். எலி படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க முடியாமலும் வாங்கிய கடனை கொடுக்க முடியாமலும் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடிக் கண்டு பிடித்து கைது செய்த போலீஸ், புழல் சிறையிலும் தள்ளிவிட்டது.
அவர்களின் அடுத்த நோக்கு…? வடிவேலுதானாம். ஏன்? இந்த கடனை தயாரிப்பாளரை வாங்கத் தூண்டிய வடிவேலு, படம் தாறுமாறான ஹிட்டாகிவிடும் என்கிற நம்பிக்கையில் அவரே ஜாமீனும் போட்டிருக்கிறார். வாங்கியவரால் முடியவில்லை என்றால், ஜாமீன் போட்டவர்தானே தரணும்? அந்த அடிப்படையில் வடிவேலுக்கு குறிவைத்திருக்கிறது போலீஸ்.
போலீஸ் தன்னை நெருங்குவதற்குள் முன் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறாராம் அவர். ஒரு ஜாமீனுக்கு இன்னொரு ஜாமீன் தீர்வா?
வடிவேலுவின் பின் கதை என்ன முடிவை வைத்திருக்கிறதோ?

