விஷால் வரலட்சுமி பிரிஞ்சுட்டாங்களா? ஹிஹி…
காதலித்தாலும் பரபரப்பு. அதே காதல் ஆக்சிடென்ட்டில் அடிபட்டு ஐ.சி.யூவுக்கு போனாலும் பரபரப்பு. சினிமாக்காரர்களின் காதலுக்கு உலகம் கொடுக்கும் மரியாதைதான் இது. இதுவரை தமிழகத்தை பரபரப்பாக்கிய காதல்களில் நம்பர் ஒன் இடம் குஷ்பு லவ்வுக்கு உண்டு. அதற்கப்புறம் சூர்யா ஜோதிகா காதல் இடம் பிடித்தது. சிம்பு நயன்தாரா காதலெல்லாம் உலக மகா ட்ரென்டிங்கில் இருந்தது. இந்த நிமிஷம் வரைக்கும் மேற்படி காதல்களை அடித்துத் தள்ளுகிற பரபரப்பு வந்ததேயில்லை.
தற்போது மார்க்கெட்டில் நல்ல நிலையிலிருக்கிற காதல் பரபரப்பு வரலட்சுமி விஷால் லவ்தான். “ஆமாய்யா ஆமாம். காதலிக்கிறோம். கல்யாணமும் பண்ணிக்கப் போறோம்” என்று முகத்திலடித்தார் போல சொல்லி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார் விஷால். ஆனால் கல்யாணம் எப்போ? என்று இருவரையும் துரத்திக் கொண்டிருந்த கேள்வி, கொஞ்ச நாட்களாக இல்லை. ஏன்? வரலட்சுமி போட்ட ட்விட் ஒன்றுதான் அதற்கு காரணம்.
ஆறு வருஷமா காதலிச்ச ஒருத்தர், பிரேக் அப் ஆகும்போது மட்டும் அதை நேரடியாக சொல்லாமல் மேனேஜரை விட்டு சொல்ல சொல்றது அசிங்கம் என்று ட்விட் பண்ணிவிட்டார் வரலட்சுமி. அவ்வளவுதான். இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சொல்லி, பிளேட்டை திருப்பி போட்டுவிட்டது கோடம்பாக்கம். நடுவில் சிம்புவை கட்டிப் பிடித்துக் கொண்டு ஒரு போஸ் கொடுத்தார் வரலட்சுமி. விஷாலின் நேரடி எதிரியே சிம்புதானே? சும்மாயிருக்குமா உலகம். எரிகிற சூடத்தில் இன்னும் ரெண்டு கேஸ் சிலிண்டரை போட்டது.
நிஜம் என்ன? உண்மையிலேயே இருவரும் பிரிந்துவிட்டார்களா?
விசாரித்தால், எல்லாம் கப்சாவாம். ஜோடி இப்பவும் ஒன்றாகதான் சுற்றி சுற்றி வருகிறதாம். நடிகர் சங்கப் பொதுக்குழு முடிந்ததும் விஷாலை சுற்றி அனல் வீசிக் கொண்டிருக்கிறதல்லவா? இந்த நேரத்திலும், ஜோடிகள் ஒன்றாகவே இருக்கிறதாம்.
அப்படியென்றால் அந்த ட்விட்? வெளியே பரப்பப்படும் பிரிவு தகவல்கள்?
அவ்வளவும் அஸ்கா புஸ்காங்க!