தம்பிக்கு சினிமா, அண்ணனுக்கு எதும்மா? விஜயகாந்த் பேமிலியின் விளையாட்டு!
முதல் தகவல் அறிக்கையை சற்று ஜாக்கிரதையாக சொல்ல வேண்டியிருக்கிறது. கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்னும் சில தினங்களில் ஒரு பிரஸ்மீட் வைக்கப் போகிறாராம். அப்பாவிடம் பேசுவதற்கு அத்தனை பத்திரிகையாளர்களும் பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சமயங்களில் இவர்களை தன் கட்சி எம்.எல்.ஏ என்று நினைத்து செல்லமாக ஒரு அறை விட்டுவிடுகிறார் அவர். “சேரை தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கங்க…” என்றும், “அடிக்க மாட்டேன் கிட்டக்க வாங்க” என்றும் அவர் பிரஸ்சின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவதையெல்லாம் சற்று திகிலோடு கவனித்துக் கொண்டிருக்கிறது அரசியல் உலகம். இந்த நேரத்தில்தான் மகன் விஜயபிரபாகர் பிரஸ்சை மீட் பண்ணப் போகிறார். (முதுகு பத்திரம் மக்கா)
எதுக்கு?
சேச்சே… இது வேற. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் சினிமா பக்கம் போய்விட்டார். மூத்தவருக்கு ஒரு தொழில் வேணுமே? அதனால் பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் (PBL)- சென்னை அணியை வாங்கியிருக்கிறாராம் விஜயபிரபாகரன்
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை விஜய் பிரபாகரன் ஏலம் எடுத்திருக்கிறார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இந்த பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் தேதி மும்பையில் ஆரம்பமாகிறது. இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது, இதன் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. சென்னை அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இன்னும் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதனை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் அவர்.
அப்படியே இன்னொரு நல்ல செய்தி. சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். விளையாட்டு நலன்…. அப்படியே அதுல நாட்டு நலன்… அப்பாவை மிஞ்சுவாரு போலிருக்கே மகன்!