சிவாஜின்னு சொன்னதும் அதிர்ச்சி ஆகிட்டாராம் பேரன்!
கோடம்பாக்கத்திலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கு அன்னை இல்லம்! ஆனால் பல ஹீரோக்களின் நடிப்பு திறமைக்கும் அன்னை இல்லத்திற்கும் இருக்கிற தொலைவு…. அறுநூறு கிலோ மீட்டரோ, எழுநூறு கிலோ மீட்டரோ? அந்தளவுக்கு சிவாஜிக்கும் இவர்களுக்குமான பற்று வரவு பஞ்சராகிக் கிடக்கிறது. ஆனால் அவர் வீட்டிலிருந்தே நடிக்க வந்திருக்கும் விக்ரம் பிரபு, தாத்தா மீது வைத்திருக்கும் மரியாதை அளவுக்கு அதிகமானதாகதான் இருக்கும். ஆனால் நடிப்பு?
அதைதான் படீர் திடீரென போட்டு உடைத்தார் கணேஷ். ‘வீர சிவாஜி’ படத்தின் இயக்குனர். “இந்த படத்தில் விக்ரம் பிரபு சார் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். கரெக்டா கதை சொல்ல வாய்ப்பு அமைஞ்சது. அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது என்னோட நண்பன் சுகுமார். கும்கி படத்தின் கேமிராமேன். நானும் அவனும் ஒண்ணா கேமிரா அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணிட்டு இருந்தோம். அப்புறம், நீ கேமிரா பக்கம் போ. நான் டைரக்ஷன் பக்கம் போறேன்னு பிளான் போட்டு ஒதுங்கினோம். இன்னைக்கு அவன் பெரிய கேமிராமேன். நானும் ‘தகராறு’ன்னு ஒரு படம் இயக்கிட்டு, இப்போ வீர சிவாஜி இயக்கியிருக்கேன். ஆனால் இப்பதான் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேருகிறோம். சுகுமார் மூலமா விக்ரம் பிரபுவிடம் கதை சொன்னப்போ, அவர் பயங்கர ஹேப்பி”.
“கதை சூப்பரா இருக்கு சார்னு பாராட்டுனார். ஆனால் படத்தில் தலைப்பை கேட்டதும் நான் இந்தப்படத்துல நடிக்கல சார்னுட்டார். ஏன்னு கேட்டால், தாத்தா பெயரை படத்துக்கு வச்சுட்டீங்கன்னா, நான் அவர் அளவுக்கு நடிக்கணும். ஆடணும். அதுக்கெல்லாம் சான்சே இல்லேன்னுட்டார்” என்றார் தகராறு கணேஷ்.
சிவாஜி என்கிற நடிப்புத் தாத்தாவிடம் இந்த பேரன் மட்டுமல்ல, எந்த பேரன் வந்தாலும் தோற்றுதான் ஆக வேண்டும். விக்ரம் பிரபு சொன்னதில் அதிர்ச்சியென்ன வேண்டிக்கிடக்கு?