எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்தால், தியேட்டர்களில் முரட்டுக் கூச்சல் கேட்கும். ரசிகர்களின் நீயா, நானா மோதல் கைகலப்பில் மட்டுமல்ல… கத்திக் குத்தில் கூட முடிந்திருக்கிறது. காலங்கள் மாறியாச்சு. அதற்கப்புறம் ரஜினி-கமல் பீரியட். அப்போதும் இதே போட்டி. இதே மோதல். இதே கைகலப்பு என்று வெறி கொண்டு திரிந்தான் ரசிகன். இப்போது அவ்விரு ரசிகர்களும் ஓரளவுக்கு பக்குவமாகிவிட்டார்கள்.
இந்த நேரத்தில் மீண்டும் இவ்விருவர் நடிக்கும் படமும் ஒரே நேரத்தில் வெளியாவது ரிஸ்கா? ரஸ்கா? என்ன மண்ணாங்கட்டியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சுச்சுவேஷன் அதை நோக்கிதான் போய் கொண்டிருக்கிறது.
திரையுலகம் நடத்துகிற ஸ்டிரைக் எப்போது முடிவுக்கு வரும் என்பதை தீர்மானிக்க முடியாமல் திண்டாட வேண்டியிருக்கிறது. இப்போது ரிலீஸ் ஆக வேண்டிய படங்களை அதே வரிசையில்தான் வெளியிட அனுமதிக்கப் போகிறதாம் தயாரிப்பாளர் சங்கம். அப்படி பார்த்தால், ஏப்ரல் 27 ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த காலா திரைப்படம் மே மாதத்திற்கு செல்லக்கூடும். விஸ்வரூபம் 2 படத்தை சென்சார் செய்து தயாராக வைத்திருக்கிறார் கமல்.
சென்சார் சர்டிபிகேட் தரப்பட்ட தேதியின் அடிப்படையில்தான் ரிலீசை முறைப்படுத்த வேண்டும் என்ற முடிவையும் தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. அப்படி பார்த்தால், விஸ்வரூபம் 2 ம் காலா படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை.
சினிமாவில் நண்பர்களாக இருந்தோம். அரசியலில் ரஜினியை எதிர்ப்பேன் என்று பேசிவரும் கமல், இந்த ரிலீசையும் ஒரு கருவியாக பயன்படுத்தி, அனல் மூட்டுவார் என்பதுதான் அனைவரது யூகம்!
யார் கூலிங்கிளாஸ் உடையப்போகிறது என்பதுதான் படு பயங்கர சஸ்பென்ஸ்!