அந்தரங்கத்தை படம் புடிச்சா ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!

நெட்டை தட்டுனா நிமிஷத்துல கொட்டுதே… என்று இளசுகள் குஷியாகிக் கிடக்கிறார்கள். ஆனால் ‘இத்தகைய எக்ஸ் வீடியோக்கள் பாகிஸ்தானிலோ, வளைகுடா நாடுகளிலோ இல்லை. இந்தியா மட்டும் ஏன்தான் அனுமதிக்குதோ?’ இப்படி ஒரு இயக்குனர் ஆதங்கப்பட்டால் அது வெறும் திண்ணைக் கச்சேரியாகவா இருக்கும்? நாட்டுக்கே நல்லது சொல்கிற படமாக உருவாகிவிட்டது. படத்தின் பெயரே ‘எக்ஸ் வீடியோஸ்’ தான்.
படத்தை சங்கடப்பட்டுக்கொண்டேதான் பார்க்க வந்தார்களாம் சென்சார் போர்டின் பெண் உறுப்பினர்கள். ஆனால் ஆச்சர்யம்… படம் முடிந்ததும், ‘நல்ல கருத்தை ஆபாசமில்லாம சொல்லியிருக்கீங்க, ஆல் த பெஸ்ட்’ என்றார்களாம் இயக்குனர் சஜோ சுந்தரிடம்.
டைரக்டரிடம் பேச ஆரம்பித்தால், செல்போனை நாலா உடைச்சு பரண் மேல போடுங்க என்பார் போலிருக்கிறது. அந்தளவுக்கு அதை ஒரு விஷ ஜந்து போல கருதுகிறார். ‘உங்க ஆன்ட்ராய்டு போனை உங்க பெட் ரூமிலோ, குளியல் அறையிலோ வச்சுருந்தா கூட, உங்க நடவடிக்கையை எங்கிருந்தோ கண்காணிக்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து நிக்குது. அதனால் ஜாக்கிரதையா இருங்க. இந்தப்படம் எடுக்க வர்றதுக்கு முன்னால ஐந்து வருஷம் இது குறித்த ஆராய்ச்சியில் இருந்தேன். நான் கேட்டதெல்லாம் நிஜம். சொல்றதெல்லாம் அதிர்ச்சி’ என்கிறார் சஜோ.
இவர் சொல்லும் இன்னொரு முக்கிய அட்வைஸ், ‘அந்தரங்க நேரங்களில் அதை வீடியோவாக எடுக்காதீர்கள்’ என்பதுதான். இவர் நம்மிடம் பேசியதை இரண்டரை மணி நேரம் காட்சியாக நீடித்தால் அதுதான் எக்ஸ் வீடியோஸ் படமாக இருக்கும் என்பது நமது நம்பிக்கை.
நல்லதோ, கெட்டதோ… சொல்லுங்க. கேட்டுக்குறோம்!
