ரேவதி… ரோகிணி… பின்னே… அட்சயா!
பேமிலி சப்போர்ட் இருந்தால் போதும். நடிகைதானே என்கிற இமேஜை தூக்கிப் போட்டு மிதிக்கலாம். “வந்தோம்… நடிச்சோம்… மார்க்கெட் போச்சுன்னா டி.வி சீரியலில் அழுதோம் என்கிற ரகம் நான் இல்லை. நடிப்பை தாண்டி எனக்கு வேறொரு லட்சியம் இருக்கு. அது நல்லப்படம் இயக்குவது” என்கிற கோதாவில் குதித்த நடிகைகள் ரேவதிக்கும், ரோகிணிக்கும் இதோ இன்னொரு துணை கிடைத்திருக்கிறார். அவர்தான் அட்சயா.
ஆர்யாவுடன் கலாபக் காதலன் படத்தில் வில்லியாக நடித்து கலக்கியிருந்தவர். அதற்கப்புறம் எங்கள் ஆசான், உளியின் ஓசை போன்ற படங்கள் அட்சயாவின் இருப்பை கோடம்பாக்கத்தில் உறுதி செய்தன. இருந்தாலும் முன்னணி ஹீரோயின் இடத்தை அவரால் பிடிக்க முடியாமல் போனதன் காரணமென்ன? அவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த இயக்குனர் அவதாரம்தான்.
யாளி என்றொரு படத்தை இயக்கி வருகிறார் அட்சயா. தயாரிப்பு? வேறு யார்? அவரது நம்பிக்கைக்கும் லட்சியத்திற்கும் பணத்தை அள்ளிக் கொட்டுகிற கணவர். தமன் ஹீரோவாக நடிக்கும் யாளி, என்ன மாதிரியான கதை?
யாளி என்கிற உருவத்தை கோவில்களில் பார்க்கலாம். சிங்க முகம், யானை முகம், குதிரை அமைப்பு என்று ஒரு விலங்குக்குள் பல்வேறு விலங்குகளை உள்ளடக்கிய மிருகம் அது. அப்படியொரு கலவையான திருப்பங்கள் கொண்ட படம்தான் யாளி. ஒரு இடத்தில் நடைபெறும் தொடர் கொலைகள் யாரால் நடத்தப்படுகிறது. அடுத்த பலி யார்? இந்த இரண்டு கேள்விக்கு பதில் தேடி ஓடினால் அதுதான் யாளி என்று ரத்ன சுருக்கமாக பதில் சொல்கிறார் அட்சயா.
சினிமாவில் பெண்கள் வருவதே பெரும் பிரச்சனை. அதுவும் அவளே ஒரு படம் தயாரித்து இயக்க வந்தால் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கணும்? எல்லாத்தையும் கடந்து வந்திட்டேன். யாளி, எனக்கு வேறொரு மதிப்பை கொடுக்கும என்கிற அட்சயாவின் கண்களில் அளப்பறிய நம்பிக்கை!
புதிய முயற்சிகளுக்கு கை கொடுக்கிற ஏரியாதான் இது. நம்பிக்கையோடு வாங்க!