டான்செட் நுழைவுத்தேர்வு: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்
இந்த ஆண்டு எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர் உள்பட 15 இடங்களில் மொத்தம் 88 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரி உள்பட 19 இடங்களில் இந்த தேர்வு நடந்தது.
காலையில் நடந்த எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை 11 ஆயிரத்து 800 பேரும், பிற்பகலில் நடந்த எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை 27 ஆயிரத்து 700 பேரும் ஆக மொத்தம் 39 ஆயிரத்து 500 பேர் எழுதினார்கள்.
இதுகுறித்து எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு எழுதிய ஜான்சன் என்பவர் கூறியபோது, “கேள்வித்தாள் எளிதாக இருந்தது. ஏற்கனவே டான்செட் நுழைவுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா இந்த ஆண்டும் கேட்கப்பட்டிருந்தது. பாடம் சம்பந்தமாக 15-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது என்றார்.
எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். ஆகிய படிப்பில் சேருவதற்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.