தன்னம்பிக்கையின் மூலம் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மாற்றுத் திறனாளி அருணிமா

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா.

அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டது. இதில் அவர் தனது இடது காலை இழந்தார்.

ஒரு காலுடன் தத்தித் தத்தி நடந்த அவர் மீது அவரது குடும்பத்தார் மிகவும் கழிவிரக்கம் காட்டினர். இதனால் கூனிக் குறுகிப்போன அவர், தன் வாழ்நாளில் எதாவது சாதனை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.

எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்ட அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று விரும்பினார். குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அவரது முயற்சிக்கு மூத்த சகோதரரும், பயிற்சியாளரும் ஊக்கம் அளித்தனர். அத்துடன் உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.

அதன்பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, கடந்த மே மாதம் 21-ம் தேதி காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற என்றென்றும் நீங்காத தனிப்பெருமையை இவர் பெற்றுள்ளார்.

’முயற்சி உடையார்- இகழ்ச்சி அடையார்’ என்ற முதுமொழிக்கேற்ப ஊனம் ஒரு பொருட்டே அல்ல என்பதை தனது தன்னம்பிக்கையின் மூலம் சாதித்துக் காட்டிய அருணிமாவின் விடாமுயற்சி, மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் ஒரு ஊக்க சக்தியாக விளங்கும் என்பது உறுதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முதன் முறையாக விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி...

Close