பைக்கில் செல்லும் திருப்பதி பக்தர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருப்பதியையொட்டியுள்ள ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மற்றும் தமிழக பகுதி பக்தர்கள் மோட்டார்சைக்களில் திருமலை செல்கிறார்கள். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என்று திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டு உள்ளது.
இன்று முதல் இது அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவில் ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
கோவில் ஊழியர்கள், மற்றும் பக்தர்களின் பாதுகாப்புக்காக இது அமுல்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற இடங்களில் இல்லாமல் திருப்பதி – திருமலை பாதையில் மட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு தேவஸ்தான ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். உத்தரவை அடிக்கடி மாற்றி வருவதாகவும், இந்த உத்தரவால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.