ரசிகர் மன்றம் டூ மக்கள் இயக்கம்! ஃபுல் ஸ்விங்கில் விஷால்! நாடு தாங்குமா மக்கழே…!

“இந்த கண்றாவி கருமம்லாம் நமக்கெதுக்குடா…” என்று கவுண்டமணி ஒதுங்கிக் கொண்டார். அடிவாங்கிக் கொண்டேயிருந்த செந்தில்தான் அதிமுக பிரமுகர் ஆனார். அந்த பொருளாதார மேதையின் பேச்சையும் அடித்துப்பிடித்துக் கொண்டு கேட்டது மக்கள் கூட்டம். (வீட்ல கிடந்து அவதிப்படுறத விட, தெரு முக்குல நின்று செந்தில் பேச்சை கேட்பதே விடுதலை என்று அவரது பேச்சையும் ரசித்தார்கள் அப்போது)

காலம் இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கோ? கருணாஸ், ஆனந்தராஜ், வரிசையில் விஷாலும் அரசியல்வாதியாகிவிட்டார். (ஏன் ரஜினி, கமல் வரிசையில் என்று சொல்லவில்லை? அதற்கெல்லாம் இன்னும் ரசிகர் கூட்டம் வேணும் வாத்யாரே) இன்று தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி, அதற்கென ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தினார் விஷால். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நிற்கப் போவதாக அடிஷனல் பிட் ஒன்றையும் அரங்கத்தில் போட்டு கலைஞர் ஜெ. சமாதிக்குள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு போனார்.

இன்று இரும்புத்திரை படத்தின் 100 வது நாள் மேடையில் இவ்வளவு அலப்பறையும் கொடுத்த விஷால், திக்கி திணறி பேசி முடித்ததன் தொகுப்பு இது. முடிஞ்சா ஆளுக்கொரு கள்ள ஓட்டு போட்டாவது, அண்ணாரை சட்ட சபைக்கு அனுப்பி வைக்க வாழ்த்துக்கள்.

இதுதான் விஷாலின் பேருரை-

வந்திருக்கும் அத்தனை பேருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை இந்த மேடை மட்டும்தான்.உங்களில் ஒருத்தனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல உங்களுடைய வெற்றி. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டால் அதை முடிக்காமல் அடுத்த விஷயத்துக்கு போக கூடாது. நடிகனாக நல்லா சம்பாதித்து நாமும், நம்ம குடும்பமும் நல்லா இருந்தா போதும் என்று நினைத்துவிட்டு போய்விடலாம்.

வீட்டுக்குள்ள போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும் அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களை பார்த்து சும்மா இருக்க முடியாது அப்படி இருந்தால் அது பிணத்துக்கு சமம். ஏழை பெண்ணோ,ஆணோ,கல்வி உதவி கேட்கும் குழந்தையோ அவர்களுக்கு உதவும் போது தெரியாதவர்கள் வாழ்வை மாற்ற உதவியுள்ளோம் என்ற சந்தோசம் வருகிறது. இந்த சமூகசேவை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சாயம் என்று கூறுகிறார்கள் அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்கு தெரிந்துவிடும். இது நிஜ வாழ்கை இதில் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை.நாட்டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ளன.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம் ஆனால் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். மக்கள் பிரச்சனை வெவ்வேறு பிரச்சனையாக இருக்கலாம் அதை தீர்த்து வைக்கும் பிரதிநிதியே அரசியல்வாதி.

அரசியல் வாதி என்பது அரசு வழக்கறிஞர், அரசு ஆசிரியர் போன்று மக்களால் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அரசியல்வாதி. ஆனால் நம் பார்வையில் அரசியல்வாதி என்பது சம்பாதிக்கும் பதவியாக சினிமாவிலும் நிஜத்திலும் நாம் நினைக்கிறோம். அதையெல்லாம் தாண்டி பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது என் ரசிகர் மன்றம். என் ரசிகர்களிடம் நான் கூறுவது என் படம் வரும் போதெல்லாம் வெளியில் தெரிவதைவிட பிறருக்கு பிறச்சனை ஏற்படும் போது அவர்களுக்கு உதவுங்கள். அது தொடர்பாக என்னிடம் கொண்டு வாருங்கள். அப்போது தான் படம் வருவதை விட ரொம்ப சந்தோசபடுவேன் என்று கூறுவேன்.

வெள்ளம் வரும் போது யாருமே செல்லாத பகுதிக்கு என்னுடன் படகில் வந்து எதையும் பொருட்படுத்தாமல் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் ஒரு நல்லது செய்தால் அதை பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் நல்லது செய்வார்கள்.இந்த மக்கள் நல இயக்கம் அரசியலை நோக்கி செல்லும் இயக்கம் அல்ல. நான் வணங்கும் இரண்டு கடவுள் அன்னை தெரேசாவும்,அப்தூல் கலாம் ஐயாவும்தான். அவர்களின் கனவு இளைய தலைமுறையிரால் மட்டுமே நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும். இது அவர்களின் கனவு அது கண்டிப்பாக நிறைவேறும். அப்தூல்கலாம் ஐயா அவர்களை பார்த்தால் அறிவும், அன்னை தெரேசாவை பார்த்தால் அன்பும் ஞாபகம் வரும்.

என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் போது துணிவு தான் ஞாபகம் வரும். என் சொத்து ஒன்னு நீங்க. இன்னொன்னு உள்ளிருக்கும் தன்னம்பிக்கை. ஆர்.கே நகரில் விஷால் ஏன் நிற்கிறார் என்று கேட்டார்கள். ஏன் நிற்க கூடாதென்று திருப்பி கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை. நல்லது பண்ண வேண்டும் என்று யார் நினைத்தாலும் போட்டியிடலாம். அதற்கு பெயர் எம்.எல்.ஏ என்றாலோ அமைச்சர் என்றாலோ கட்சி என்றாலோ தப்பே இல்லை. கட்சி தொடங்குவது தப்பில்லை நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கேன், உங்களுக்கு பின்னால் இருக்கேன் என்பதை கூறவே அழைத்தேன்.

இவ்வாறு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் விஷால்.

நமக்கு ஒரே டவுட்தான். ஆர்.கே நகருக்கு நல்லது பண்ணுவேன்…, நல்லது பண்ணுவேன் என்று போராடி கண்ணீர் சிந்திய விஷால், அந்த தொகுதிக்கு அதற்கப்புறம் என்ன செய்தார்? குறைந்தபட்சம் யார் வீட்டிற்காவது வாட்டர் கேன்களாவது வாங்கிக் கொடுத்தாரா என்பதுதான் அது.

சரி விடுங்க… திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நிற்கப் போகிறாராம். காமெடி சேனல்களை சிறிது காலத்திற்கு குளோஸ் பண்ணி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வர்லாம் வர்லாம் வா! இப்படிக்கு நல்ல பட ரசிகர்கள்!

Close