சாதிக்கட்சி டூ சர்வ கட்சி! நடிகர் ரஞ்சித்தின் நடைவண்டி பயணம்!
காபி கொட்டை புளியங் கொட்டை விளம்பரத்திற்கு கூட ரஞ்சித்தை புக் பண்ணுவதில்லை கோடம்பாக்கம். ஏனென்றால் அவர் நடித்த முந்தைய படங்களின் டிராக் ரெக்கார்டு அப்படி! இவரைப்போய் ஏதோ மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்று நினைத்த பா.ம.க கோலாகலமாக கட்சியில் இணைத்து மாநில லெவலுக்கு ஒரு பதவியும் கொடுத்ததெல்லாம் வடை சட்டியில் காக்காயே விழுந்த மாதிரியான அதிர்ஷ்டம்.
அப்படிப்பட்ட ரஞ்சித், பா.ம.க வின் பச்சோந்தி தனத்தை பற்றி பேசி தன்னையும் ஒரு பாஸான பொலிட்டீஷியன் ஆக காட்டிக் கொள்வதை என்னவென்று சொல்வது? இந்த வருடத்தின் சிறந்த காமெடி பீஸ் பா.ம.க வின் பெரிய பீஸ்களான மருத்துவர்கள்தான் என்பது ஊரறிந்த விஷயம். அதற்காக பல்லி பச்சோந்திக்கு அட்வைஸ் பண்ணிய கதையாக அமைந்த ரஞ்சித்தின் குற்றச்சாட்டை மீடியாக்கள் ஊதி ஊதி பெரிசாக்கியது என்ன விதத்தில் நியாயம் என்றே புரியவில்லை. தம்பி… போன எலக்ஷனுக்கு நீ எங்கேயிருந்தே? அரசியலுக்கும் உனக்குமான முந்தைய வரைபடம் என்ன? தங்கர்பச்சான் பேசிய அளவுக்காவது நீ பா.ம.க பற்றி பேசியிருக்கிறாயா? என்றெல்லாம் கேட்க வேண்டுமல்லவா? ம்ஹும்.
நேற்று ரஞ்சித்தின் பேட்டியை 100 மைக்குகள் சகிதம் ஒளிபரப்பி தள்ளின. இந்த ஊடக பசியை உப்பு மிளகாய் போட்டு ருசித்ததென்னவோ ரஞ்சித்துதான். கட்… இந்த புனிதாதி புனிதர், இன்று அ.ம.மு.க வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். லட்சோப லட்சம் ஆதரவாளர்கள் கொண்ட ரஞ்சித்தை ஆரத்தழுவி இயக்கத்தில் சேர்த்திருக்கிறார் தினகரன்.
அ.ம.மு.க வின் எந்த கொள்கை இவரை ஈர்த்ததென ரஞ்சித் சொல்வார். இன்னும் மூன்று மாதம் கழித்து என்ன நடக்கப் போகிறதோ?
நாவலர் நாஞ்சித் சம்பத்தையே நரம்பு புடைக்க ஓட வைத்த தினகரன், ஒரு செல்வாக்கும் சொல்வாக்கும் இல்லாத ரஞ்சித்தை என்ன பண்ண காத்திருக்கிறாரோ? ரஞ்சித்தும் இன்னும் எத்தனை கட்சிகள் தாவ காத்திருக்கிறாரோ?
வெள்ளை எலிக்கு வேஷ்டி கட்டி கொல்லை பக்கமா கூட்டிட்டு போகதான் எத்தனை கட்சிகள்?!