எங்கே போனார் இஷாரா? தவிக்குது தவிக்குது படக்குழு!
‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா?’ என்றொரு படம் தயாராகி வருகிறது. அகில் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை கேவின் ஜோசப் என்பவர் இயக்கி வருகிறார்… வருகிறார்…. வருகி…றார்! ஏன் இத்தனை இழுவை? நினைத்த நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய படம், அப்படத்தின் கதாநாயகியால் இன்னும் இன்னும் என்று இழுத்துக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தமான பஞ்சாயத்து பின் வருமாறு-
சதுரங்க வேட்டை படத்தில் நடித்து அத்தனை உள்ளங்களையும் ஆஹா போட வைத்த இஷாராதான் இப்படத்தின் நாயகி. அதற்கப்புறம் விர்ரென மேலே வந்திருக்க வேண்டியவர் சுர்ரென கீழே போய், ஒரு கட்டத்தில் ஆள் காணாமலே போய்விட்டார். இந்த படக்குழுவினரின் கெட்ட நேரம், இஷாராவிடம் மாட்டிக் கொண்டார்கள். 20 நாட்கள் கால்ஷீட் போதும் என்று கேட்டு வாங்கியவர்களுக்கு இரண்டாவது நாளே அதிர்ச்சி. ந்தா வந்துர்றேன் என்று கிளம்பிப் போனவர்தான். இந்த நிமிஷம் வரைக்கும் வரவேயில்லை. போன் அடிக்கும் போதெல்லாம் இங்கேயிருக்கேன்… அங்கேயிருக்கேன்… என்று கூறிவந்தவர், ஒரு சந்தர்ப்பத்தில் என்னால நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
உன்னால எங்களுக்கு இவ்ளோ நஷ்டம். பிரஸ்ல சொல்லி பிச்சுப்புடுவோம் பிச்சி என்று கூறிய தயாரிப்பு தரப்புக்கு இஷாரா கொடுத்த பதில் செம கூல்!
“ம் சொல்லிக்குங்க”
கோர்ட்டுக்கு போவோம் என்றார்களாம் இவர்கள். “ம்…. போங்க” என்றாராம் அதற்கப்புறமும். எப்படியும் வேறொரு நடிகையை வைத்துதான் மிச்ச படத்தை எடுத்தாக வேண்டும். ஆனால் இது மாதிரி நடிகைகளை விடக் கூடாது என்று முடிவெடுத்தவர்கள், நிஜமாகவே கோர்ட்டுக்கு போகும் எண்ணத்திலிருக்கிறார்கள்.
சினிமா பார்க்கறது மட்டுமல்ல, எடுப்பதும் கஷ்டம்! அப்படியே உருண்டு புரண்டு எடுத்தாலும், இந்த மாதிரி நடிகைகள் உள்ளே வந்தால், பூராவும் கஷ்டம்!