ரிவ்யூ பண்ணலாம்! ஆனா உங்க இஷ்டத்துக்கு பண்ணக்கூடாது! காக்காமுட்டை மணிகண்டன் காச்மூச்!
“இருபத்தைந்து முப்பது வருஷமா இந்த சினிமா இன்டஸ்ட்ரியை கவனிச்சுட்டு இருக்கீங்க. ஒரு படத்தை நார் நாரா கிழிக்கிற உரிமை கூட உங்களுக்கு இருக்கு. ஆனால் யார் யாரோ உள்ள வந்து விமர்சனங்கற பேர்ல பேசுறதையும் எழுதறதையும் எப்படி பொறுத்துக்க முடியும்?” ஒரு பொது மேடையில் இப்படி பேசினார் நடிகை சுஹாசினி. கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும். படம் ஆரம்பிக்கும் போதே, படத்தின் விமர்சனத்தையும் எழுத ஆரம்பித்துவிடுகிற பலரை, குதறாத குறையாக கவனித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமாவின் படைப்பாளிகள் உலகம்!
இங்குதான் காக்கா முட்டை மணிகண்டனையும் யாரோ கதற கதற ஊற வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது. மனிதர் பொங்கி விட்டார் பொங்கி. “விமர்சனங்க்ற பேர்ல கன்னாபின்னான்னு எழுதறீங்க. நீங்க படைப்பாளி இல்ல. ஒரு இயக்குனர் எந்த சூழ்நிலையில் எந்த காட்சியை வைக்கிறார் என்பது அவருக்குதான் தெரியும். டெக்னிகலா விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்காம எழுதுவது ரொம்ப ரொம்ப தப்பு. படம் நல்லாயில்லேன்னா நல்லாயில்லேன்னு எழுதுங்க. அதுல நான் தலையிடல. ஆனால் இது அசிங்கமா இருக்கு. அது தப்பாயிருக்குன்னு சொல்ற உரிமை உங்க யாருக்கும் இல்லை” என்றார் கோபமாக!
இத்தனைக்கும் அவரது காக்கா முட்டையையும் சரி, குற்றமே தண்டனையையும் சரி. மீடியாக்கள் கொண்டாடிதான் இருந்தார்கள். (நடுவில் எவன் வந்து பொங்கல் பானையில் பொரியல் கிண்டுனானோ… அவனுக்கே எல்லா வசவும் போய் சேரட்டும்! )
விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ மணிகண்டன் இயக்கத்தில் வரும் மூன்றாவது படம். “நீங்க படம் முழுக்க சிரிச்சுகிட்டே இருக்கலாம். அப்படியொரு ஜாலியான படம்” என்றார்.
To listen audio click below :-