ஹ்ம்ம்… துபாய்ல இப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்க!

‘திருந்துடா காதல் திருடா ’ என்றொரு படம் வரப்போகிறது தமிழில். நியாயமாக திருந்துடாவை ‘திருந்துங்கடா ’ என்று வைத்திருக்க வேண்டும் போல. அந்தளவுக்கு இருக்கிறது படத்தின் ஒன் லைன். கதையை பற்றி கேட்க கேட்க மூச்சு முட்டுகிறது. முன் பனியன் வேர்க்கிறது. அப்படியொரு அட்டாலக்கடி குட்டாலக்கடி படமாக வளர்ந்து வருகிறது இந்த திருந்துடா காதல் திருடா.

வேறொன்றுமில்லை, தமிழகத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு போகிறவர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார் இயக்குனர். முதல் தலைமுறை கள்ளத் தோணியில் போய் அங்கேயே செட்டில் ஆனது. இரண்டாம் தலைமுறை ஏஜென்ட்டுகள் மூலம் பணத்தை கட்டி எப்படியோ போராடி போய் சேர்ந்தது. மூன்றாம் தலைமுறை இருக்கிறதே… அதுதான் கிரேட். முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து ஐ.டி நிறுவனங்களுக்காக செல்கிறவர்கள். இவர்கள்தான் மித மிஞ்சிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு குடி குட்டி என்று கூத்தடிக்கிறார்கள். இந்த மூன்று தலைமுறையை சேர்ந்த துபாய் வந்தேறிகளை பற்றி சிரிக்கவும், சில நேரங்களில் மனசு வலிக்கவும் சொல்லியிருக்கிறாராம் இப்படத்தின் இயக்குனர் அசோக் ஆர் நாத். இவர் மலையாளத்தில் இயக்கிய ஷபவம் படத்திற்கு தேசிய விருதே கிடைத்திருக்கிறது.

கல்யாணம் ஆகி ஐந்தே நாளில் மனைவியை இங்கு விட்டுவிட்டு துபாய் போகிறவர்களின் வாழ்க்கையும் வேதனையும் எப்படியிருக்கும்? குழந்தையை ஐந்து வயதில் விட்டு விட்டு போனவர்கள் அந்த குழந்தைக்கு திருமண வயது நெருங்கும்போது திரும்பி வந்தால் எப்படியிருக்கும்? நடுவில் அவர்களின் பாலியல் இச்சைகளையும் கூட யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் அசோக். (இங்குதான் படத்தில் வரும் சில காட்சிகள் திகிலோட்ட திமிக்லிக்காவாக இருக்கிறது. இட் மீன்ஸ்… ஷகிலா பட ரேஞ்சுக்கு இருக்கிறது)

மலையாள நடிகர் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சுமார் நாற்பது புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அவ்வளவு பேரும் துபாய் வாழ் தமிழர்கள். கதாநாயகி சுதக்ஷனா சென்னையை பூர்வீகமாக கொண்டவராம். அங்கு துபாயில் பணியாற்றுகிறார். முறைப்படி ஆடிஷன் வைத்து இந்த நாற்பது பேரையும் தேர்ந்தெடுக்கிறார்கள் படக்குழுவினர்.

துபாயில் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, யாருமே படமாக்க முடியாத இடங்களில் படமாக்கியிருக்கிறோம். அதையெல்லாம் பார்த்தாலே போதும், பிரமித்து போவீர்கள் என்கிறார் சணல் தோட்டம். இவர்தான் படத்தின் ஒளிப்பதிவாளர்.

காதல் திருடன் யார் யார் மனசையெல்லாம் கொள்ளையடிக்கப் போகிறானோ?

2 Comments
  1. Ghazali says

    கொள்ளையடித்து அப்புறம் வெள்ளையடிப்பான்?

  2. Mahesh says

    //முறைப்படி பாஸ்போர்ட் எடுத்து ஐ.டி நிறுவனங்களுக்கு செல்கிறவர்கள்//

    நான் துபாயில் 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன்… இங்கு பெரிய சாப்ட்வேர் development எதுவும் கிடையாது.. ஐ.டி நிறுவனங்கள் பெரிய அளவில் எதுவும் இல்லை…. இது என்ன அமெரிக்காவா ? ஐ.டி நிறுவனங்கள் இருப்பதற்கு. இவர் சொல்வதை போல் மூன்றாம் தலைமுறையினர் துபாயில் இல்லவே இல்லை…

    மேலும் கள்ளதோணி எல்லாம் 1970 களிலேயே முடிந்துவிட்டது… அப்படி வந்தவர்கள் எல்லோரும் துபாய் விட்டு நாடு திரும்பி ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது…

    இயக்குனருக்கு துபாய் பற்றி ஒரு தெளிவான அறிவு இல்லை என்று நன்றாக தெரிகிறது… கேட்டது, முன்பு படித்ததை வைத்து இவர் உருவாக்கி இருக்கும் திரைக்கதைக்கு துபாய் பெயரை பயன்படுத்துகிறார்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவை தெரிந்தளவுக்கு கணிதமேதை ராமானுஜரை தெரியவில்லையே? இயக்குனர் ஞான.ராஜசேகரன் வேதனை!

பாரதி, பெரியார் என்று ஞான.ராஜசேகரன் இயக்கிய படங்கள் இரண்டும் தமிழ்சினிமாவின் பொக்கிஷங்கள். வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வித்தை தெரிந்தவர்களில் ஞான.ராஜசேகரனுக்கு முதலிடம் கொடுக்க தயங்கியதேயில்லை தமிழ்சினிமா ரசிகர்கள்....

Close