ரசிகர்களுக்காக கபாலியில் ஒரு இந்திப்பாடல்?
எத்தனை கோடிகள் செலவு செய்யவும் தயாராக இருக்கும் ஒரு தயாரிப்பாளர். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு ஹீரோ. அறிமுக நிலை இயக்குனர்தான். ஆனால் ஸ்டஃப் அதிகம் என்று கொண்டாடப்படுகிறவர். இப்படி மூன்று முத்துக்கள் கிடைத்தும், கபாலி பாடல்களை கம்போஸ் பண்ணிய விதத்தில், ‘நெருப்புடா’வை தவிர மற்றதெல்லாம்…. சற்றே நம நம!
இருந்தாலும் தலைவர் ரசிகர்களாச்சே… வாயை திறந்து வசை பாட மாட்டோம் என்று மவுன விரதம் இருக்கிறது ரஜினி கூட்டம்!
இந்த நிலையில்தான் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க விடுவது போல ஒரு பாடல் வேண்டும் என்று நினைத்தாராம் பா.ரஞ்சித். மீண்டும் சந்தோஷ் நாராயணனை கிண்டி கிழங்கெடுப்பதை விட, இந்தியில் ஹிட்டடித்த ஒரு பாடலை உள்ளே கொண்டு வரலாம் என்று நினைத்தாராம். மிக மிக ரகசியமாக விலை பேசப்பட்டு ஒரு இந்திப்பாடல் உள்ளே செருகப்பட்டிருக்கிறது.
அந்த காட்சியில் ரசிகர்களுக்கு கொள்ளாத ஆனந்தம் இருக்கும் என்பது மட்டும் திட்டவட்டம்!
இது ஒருபுறமிருக்க, ‘நெருப்புடா’ பாடலை சில தனி நபர்கள் ஆல்பமாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அதில் அப்பாடலை எழுதி பாடிய அருண் ராஜா காமராஜையே நடிக்கவும் வைத்திருக்கிறார்களாம்.