பெரிய அஜீத்துன்னு நினைப்பு! சினிமா விழாவில் ஜெய்யை வெளுத்த தயாரிப்பாளர்!
தலையை சுற்றி வட்டம் கட்டி வெளிச்சம் அடிக்கிற நினைப்புடனே சுற்றி சுற்றி வருகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் பாதி பேருக்கு, “உங்க பேட்டரி காலியாகிருச்சு தம்பி” என்று புரிய வைப்பதற்குள் பெரும் பாடு பட்டு விடுகிறது உண்மை! சொந்தப்பட ஷுட்டிங்குக்கே ஆயிரம் அல்டாப்புடன் வந்து சேர்வார்கள். வந்தாலும் தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டு பிடித்து சூழ்நிலையை காரமாக்குவார்கள். கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போலதான் இவர்களை கையாள வேண்டும். இல்லையென்றால், நோக்காடு நமக்குதான் என்று பெரும் வேதனையோடு படத்தை முடிக்கக் கூடிய சூழலுக்கு தள்ளப்படும் யூனிட். இப்படியொரு விஷ குணத்தோடு வளரும் செடிகளில், முதலிடத்தில் இருப்பது யார் யார் என்று ரெகுலர் ரசிர்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கே புரியும்.
இதில் ஜெய் எப்படி?
இன்று அவரது பவுசு பஞ்சர் ஆகிவிட்டது. சென்னை 28 பார்ட் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக்குக்காக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தது வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட குழு. முதல் பார்ட்டில் நடித்த அத்தனை பேரும் வந்திருந்தார்கள். எக்சப்ட்… ஜெய்! இத்தனைக்கும் இந்தப்படத்தில்தான் அறிமுகம் அவர். இந்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்ததற்கு, “எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற வழக்கம் இல்லையே” என்று கூறிவிட்டாராம் அவர்.
கடும் கோபத்துடன் மைக்கை பிடித்தார் தயாரிப்பாளர் டி.சிவா. “அஜீத் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வரலேன்னா கூட பரவாயில்லை. ஏனென்றால், அவரை பொது இடங்களில் பார்க்காத ரசிகர்கள் திரண்டு தியேட்டருக்கு வந்துவிடுகிறார்கள். அவரது படங்களுக்கு பெரிய ஓப்பனிங் இருக்கிறது. இந்த இடத்தை அடைய அவர் எடுத்துக் கொண்ட உழைப்பும், வலியும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் ஜெய் மாதிரி நடிகர்கள், இன்னும் வளரவேயில்லை. அதற்குள் தன்னை அஜீத் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது தவறு. இந்த நிகழ்ச்சிக்கு அவர் எல்லாருக்கும் முன்பு வந்திருக்க வேண்டும்” என்று நேரடியாக போட்டுத் தாக்கினார்.
நல்லவேளையாக ஜெய்யை காப்பாற்றினார் வெங்கட்பிரபு. நான் இந்த நிகழ்ச்சிக்கு வான்னு அவரை கூப்பிடல. கூப்பிட்டிருந்தா வந்திருப்பார் என்று பூசி மெழுக… நிலைமை சால்வ்!
கூரா இருக்கறதெல்லாம் கொம்பும் இல்ல! கொதிப்பா இருப்பதெல்லாம் அடுப்பும் இல்ல!