நாற்பது லட்சம் கோவிந்தா? காஜல் மீது கம்ப்ளைன்ட்!
நடிகர்களுக்கு கொடுக்கும் அட்வான்சாவது திரும்பிவிடும். நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் பெரும்பாலும் ஸ்வாகா! திருப்பி கேட்டால், செய்கூலி சேதாரம் என்று ஏதாவது கணக்கு போட்டு சொல்லி கதையை முடித்துவிடுவார்கள். ஆந்திராவிலிருக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், இங்கிருப்பவர்கள் அங்கிருக்கும் சங்கங்களிடமும் அழுது புலம்புவதெல்லாம் அன்றாட சுப்ரபாதம்!
இதில் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாயத்தை எந்த லிஸ்ட்டில் வைப்பதோ தெரியவில்லை. விஷயம் இதுதான். நண்பேன்டா படத்தை துவங்குவதற்கு முன்பு இதில் நடிக்க வைப்பது யாரை என்கிற பெருங்கேள்வி அவரை துரத்திக் கொண்டிருந்தது. துப்பாக்கி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் காஜல் அகர்வால். விஜய் பெரிய ஹீரோ. அவருடன் நடிக்கும் போது ஆட்டோமேட்டிக்காக ஆட்டோ மீட்டர் போல கதாநாயகி சம்பளமும் ஏறிவிடும். இதையெல்லாம் கணக்கு போட்ட உதயநிதி, ஒரு சம்பளத்தை நிர்ணயித்து காஜல் அகர்வாலுக்கு நாற்பது லட்சத்தை அட்வான்சாக கொடுத்தார். (அட்வான்சே இவ்ளோன்னா மெயின் மீட்டர் எவ்ளோ இருக்கும்?)
அதற்கப்புறம் கால சூழ்நிலைகள், கரண்ட் சுச்சுகேஷன்கள் வெவ்வேறாக மாறி, அதில் நயன்தாரா நடிக்க வந்துவிட்டார். இவருக்கே சுமார் இரண்டு கோடி சம்பளம் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். இந்த நிலையில் தான் கொடுத்த நாற்பது லட்சத்தை அவர் காஜல் அகர்வாலிடம் திரும்பி கேட்க, அதையேன் கேட்கிறீங்க? வேறு படத்தில் நடிச்சு கழிச்சிகிட்டா போச்சு என்றாராம் அவர். இப்படி வலிய வந்து வலை போடுவதால், இல்லையில்ல… அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போதைக்கு அட்வான்சை திருப்பிக் கொடுத்துருங்க என்றார்களாம் உதயநிதி தரப்பிலிருந்து.
ம்ஹும்…. கடலுக்குள் போன திமிங்கலம் கடலை உருண்டைகெல்லாமா ஆசைப்பட்டு கரை திரும்பும்? அட்வான்ஸ் கோவிந்தா. வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறாராம். சங்கமே சல்லடையாகிக் கிடக்கு. இதுல இந்த பஞ்சாயத்தை வேற பேசப் போறாங்களாமா?