கமலிடம் அன்பு காட்டிய பண்பு நிறை அமைச்சர்கள்! சிவாஜி மணிமண்டப விழாவில் அதிசயம்!
இதே ரஜினி கமல்தான். சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு திரைப்பட விழாவில் 35 வது வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். மேடையில் தகுதியே இல்லாதவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ரஜினியும் கமலும் பின் வரிசையில் நிற்க வைக்கப்பட்டார்கள். ஒரு சின்ன புன்முறுவலுடன் அதை எதிர்கொண்டனர் இவ்விருவரும். அந்த மேடையில் பெண் சிங்கம் ஜெ. இருந்தது.
அதேபோல ஒரு அரசு விழாதான் இதுவும். குறிப்பாக அம்மாவின் அரசு விழா. ஆனால் சமீபகாலமாக தமிழக அரசு குறித்து கடும் விமர்சனங்களை வைத்து வரும் கமலுக்கு அவமானம் நேராமல் பார்த்துக் கொண்டார்கள் அமைச்சர்கள். குறிப்பாக ஜெயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜு இருவரும்.
நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டப திறப்பு விழா.
அரசு விழா. அமைச்சர் பெருமக்கள் கூடியிருக்கும் இந்த இடத்திற்கு ரஜினியும் கமலும் வருவார்கள். ஆனால் அமைச்சர்கள் கிளம்பிப் போன பிறகு… என்று பத்திரிகையாளர்கள் நினைத்துக் கொண்டிருக்க, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளே வந்த பின் வந்தார்கள் ரஜினியும் கமலும்.
அமைச்சர்கள் மேடையில் ஏற, சற்றே தயங்கியபடி முன் வரிசையில் அமர்ந்தார்கள் இருவரும். முன்னதாக கமல்ஹாசனை தேடிப்பிடித்து வணக்கம் சொன்ன கடம்பூர் ராஜு, ஜெயக்குமாரின் பண்பை வியக்காமலிருக்க முடியவில்லை. முதலில் மேடையேறிய ஜெயக்குமார், கமல் ரஜினியையும் மேடைக்கு அழைத்தார். இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
இந்த அரசியல் நாகரீகத்தைதான் நாடு விரும்புகிறது. தொடருங்கள் அமைச்சர்களே…!
பின் குறிப்பு- ஆமாம்… கல்வெட்டுல கலைஞர் கருணாநிதி பேரை தூக்கிட்டீங்களாமே? உங்கள நம்பி ஒரு வினாடி பாராட்ட முடியலையே?
https://youtu.be/wbWjGBdyt4o