எட்டு மாசம் காத்திருந்தாராம்! மிருகம் ஆதிக்கு பொறுமை ஜாஸ்தி!
கதையும் சம்பளமும் நேர்க்கோட்டில் இருந்தால் அதைவிட அதிர்ஷ்டம் வேறொன்றுமில்லை. நல்ல சம்பளம் வருதே என்பதற்காக மொக்கை கதையில் நடித்து, உள்ளதும் போச்சே நொள்ளைக்கண்ணா ஆகி நிற்கும் ஹீரோக்கள், தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் கிடைப்பார்கள். இதோ- இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ படத்தை ஆபாச குப்பை என்று வர்ணிக்கிறது ஊர். ஆனால் ‘யான்’ என்ற படத்தின் நஷ்டத்திற்காக இந்தப்படத்தில் ஓசியில் கூட்டு சேர்ந்திருக்கும் ஜீவா மாதிரி ஹீரோக்கள் இதற்கு உதாரணமாக இருக்கும் போது, ஆதி மாதிரி ஆக்ஷன் ஹீரோக்கள் கதைக்காக காத்திருப்பது அதிசயம்தானே?
யெஸ்… ஏஆர்கே சரவண் இயக்கி வரும் மரகத நாணயம் கதையை எட்டு மாதங்களுக்கு முன் கேட்டாராம் ஆதி. “கதை சூப்பர். நான் இந்தக் கதையில் நடிச்சே ஆகணும். நீங்களும் தயாரிப்பாளர் பாருங்க. நானும் தேடுறேன். கண்டிப்பா ஜாயின் பண்ணி ஹிட் அடிக்கிறோம்” என்று கூறிவிட்டார் சரவணிடம். எப்படியோ…. உறுமீன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி டில்லிபாபு கிடைத்தார். தினந்தோறும் இரண்டு கதைகளையாவது கேட்டுவிடும் இவர், சரவண் கதையையும் கேட்டுவிட்டு தன் அலுவலகத்தில் கதை கேட்கும் இன்னொரு குழுவுக்கும் அனுப்பி வைத்தாராம். இது மாதிரி சுமார் 80 கதைகளை கேட்டவர், தன் அலுவலகத்தில் இருக்கும் கதை கேட்கும் குழுவை கொண்டு ஒவ்வொரு கதைக்கும் மார்க் போட்டதில் கடைசியாக வென்றது மரகத நாணயம்தான். சுமார் 90 மார்க்குகள் வாங்கி முதலிடத்தில் இருந்தது இந்த கதை.
“விஜய் டி.வி யில் வர்ற சூப்பர் சிங்கர் மாதிரி ஆகிருச்சு என்னோட அனுபவம்” என்கிறார் ஏஆர்கே.சரவண்.
மிருகம், ஈரம் என்று செலக்டிவ்வாக நடித்தே பழகிய ஆதிக்கு மரகத நாணயம், மறக்க முடியாத வெற்றியை கொடுத்தால் ஆச்சர்யம் இல்லை. ஏனென்றால் திட்டம் போட்டு கிளம்பிய கூட்டமா தெரியுது இது!
பின்குறிப்பு- இந்த படத்தின் டைரக்டர் ஏஆர்கே.சரவண், முண்டாசுப்பட்டி படத்தின் கோ டைரக்டராம்! நல்ல விதை நெல்லுதான்!
https://youtu.be/ReY7AYsaEOQ