8 ம் தேதி உண்ணாவிரதம்! வர்றீங்களான்னு கேட்க ஆளில்லை!
மசால் வடை சட்டியில் இருப்பது வரைக்கும் ஒரு எலி கூட மூக்கை நுழைப்பதில்லை. சுட்டுவிடும் என்கிற அச்சம்தான். ஆனால் அதே எலி, பொறிக்குள் வந்த மசால் வடையை மதிக்காமல் இருந்ததில்லை. கிட்டதட்ட வடை தொடும் எலி போலாகியிருக்கிறார்கள் ரஜினி, அஜீத், விஜய் மூவரும்.
வருகிற 8 ந் தேதி நடிகர் சங்கம் சார்பில் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்கு (சாப்பிட்ட பின்?) தொடங்கி, மதியம் 3 மணிக்கு (சாப்பாட்டுக்காக) முடிந்துவிடும் இந்த போராட்டத்தின் முக்கிய செய்தி, தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகளான காவிரி மேலாண்மை வாரியம், மீத்தேன், நியூட்ரினோ ஆய்வு உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான்.
இதில்தான் இன்று வரை இந்த முக்கிய பேராபத்து விஷயங்களுக்காக வாயை கூட திறக்காத அஜீத்தும் விஜய்யும் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். வழக்கமாக எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இவ்விருவருக்கும் போன் செய்து அழைத்து வந்த சங்கம், இந்த முறை கடமைக்கு கூட போன் பண்ணவில்லை.
வந்தால் அவங்களுக்கு நல்லது. வரலேன்னா மக்கள் பார்த்துப்பாங்க. இதுல நமக்கென்ன வந்தது என்று இருக்கிறார்களாம்.
மேற்படி ஹீரோக்களும் நிலைமையை உணர்ந்து உண்ணாவிரத அறப்போருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.