பள்ளிப்பருவத்திலே / விமர்சனம்
‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற அவஸ்தையும், ‘போங்கடா நீங்களும் உங்க பச்சப்புள்ள காதலும்’ என்றுதான் புலம்ப வைக்கிறது.
தலைமை ஆசிரியரின் மகன் நந்தன் ராமுக்கு தன்னுடன் படிக்கும் வெண்பா மீது காதல். உடனிருக்கும் நண்பர்களின் உசுப்புதல் காரணமாக, வெண்பாவுக்கும் தன் மீது காதல் இருப்பதாக நினைக்கிறான். வெண்பாவுக்கும் நந்தன் மீது ஒரு ஈர்ப்பு. பணக்கார குடும்பத்தின் பச்சைக்கிளியான வெண்பாவை அவ்வளவு சீக்கிரம் நெருங்கிவிட முடியுமா? நந்தனின் ஆசை என்னவானது? வெண்பாவின் மனசுக்குள் நந்தனுக்கு இடம் இருந்ததா? என்பதையெல்லாம் தாண்டி எங்கெங்கோ டிராவல் ஆகிறது கதை. க்ளைமாக்சை நெருங்குவதற்குள், ரெண்டு கழுதையில ஒரு கழுதைய வெட்டியாவது போட்டுட்டு படத்தை முடிங்களேப்பா… என்றாக்குகிறார்கள் நம்மை.
அறிமுக ஹீரோ நந்தன் ராம் முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறார். நன்றாக டான்ஸ் ஆடுகிறார். நன்றாக நடிக்கிறார். ஆனால் நேரம் போக போக ‘நீ என்னை காதலிக்கிறியா இல்லையா சொல்லு’ என்று முன்னாள் காதலியிடம் முரண்டு பிடிக்கும் போது மட்டும், நாலு சாத்து சாத்தினால் தேவலாம் போலிருக்கிறது. முதல் படத்திலேயே இவ்வளவு டெப்த் ஆகாது தம்பி.
வெண்பா க்யூட். ஆனால் குருவி தலையில் குண்டானை வைத்தது போல வெயிட்டான ரோல். பொசுக்கென அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட… மிச்ச படத்தை என்னய்யா பண்ணப் போறீங்க? என்கிற ஜுரமே வந்துவிடுகிறது நமக்கு. அதற்கப்புறம் புகுந்த வீட்டுக்கு போகிற வெண்பா, மீண்டும் காதலனை சந்திக்கிற நிலைமை வருகிறது. கிடைத்த இடத்திலெல்லாம் பர்பாமென்சில் பின்னுகிறார் வெண்பா.
ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ், லுக், திருட்டுத்தனம், அழுகை இவற்றையெல்லாம் தாண்டி ரசிக்க வைக்கிறது படத்தில் வரும் கிழவி ஒன்று. அதற்காக புறம் பேசும் கிழவியை ஆர்.கே.சுரேஷை விட்டு அடிக்க விடுவதெல்லாம் ஓவர். அதிலும் பைட் மாஸ்டரை போட்டு புரட்டுவது மாதிரி… என்னங்க இப்படியெல்லாம்?
ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் இருப்பாரோ, அப்படியெல்லாம் இருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்கோர்ஸ்… அவர்தான் இந்தப்படத்தில் வரும் தலைமை ஆசிரியர். அதுமட்டுமல்ல, இவர்தான் நந்தனின் அப்பா. ஸ்கூலுக்கு போலீசே வந்தாலும் வாசலோடு நிறுத்தி அனுப்புகிற துணிச்சலும் கம்பீரமும் சூப்பர் சார்…
இவரது மனைவி ஊர்வசி. ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணு. அதை நிரூபிப்பதற்காக அவர் படும் பாடு… அதைக் கூட மன்னித்துவிடலாம். அதற்காக மொத்த க்ளைமாக்சையும் இவர் தலையிலா ஏற்றி வைக்க வேண்டும்? முடியல…
ஆர்.கே.சுரேஷ் வழக்கம் போல பல்லை கடித்துக் கொண்டு ஆக்ரோஷப்படுகிறார்.
கதையின் கனம் தாங்காமல் தியேட்டரே புட்டுக் கொண்டால் என்னாவது என்று நினைத்திருக்கலாம். கிட்டதட்ட டிராக் காமெடி போட்டு தியேட்டரை பேலன்ஸ் பண்ண விட்டிருக்கிறார்கள். அந்த சுமையை அழகாக வாங்கி, அருமையாக பிரசன்ட் பண்ணியிருக்கிறார் தம்பி ராமய்யா. தேசியக் கொடியை ஏற்றி வைத்து தம்பி ராமய்யா ஆற்றும் உரை, இன்னும் பல வருடங்களுக்கு சேனல்களில் பின்னி எடுக்கும்.
காதில் தேனாக பாயும் விஜய் நாராயணன் இசைக்காக இன்னும் ஒரு முறை கூட தியேட்டருக்கு விசிட் அடிக்கலாம். எல்லா பாடல்களும் சூப்பரோ சூப்பர். குறிப்பாக ‘மொசக்குட்டி கண்ணால ஒருத்தி…’ இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்டாக அமைந்தால் ஆச்சர்யமில்லை. இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடியவர்களுக்கும் தனி பாராட்டுகள்.
தஞ்சையின் அழகை தாராளமாக அள்ளி வந்திருக்கிறது ரகுராமனின் ஒளிப்பதிவு.
வாசு பாஸ்கர் இயக்கியிருக்கிறார். சென்ட்டிமென்ட்டை ஹோல் சேல் ரேட்டில் வாங்கி, ஒவ்வொரு ரசிகனின் பாக்கெட்டிலும் கிலோ கணக்கில் கொட்டி கொட்டி அனுப்புகிறார். வெறும் காதலும், அரட்டையும், துள்ளலுமாக இருந்திருந்தால் ‘பள்ளிப்பருவத்திலே’ மனசை அள்ளியிருக்கும்!
அஞ்சாம்பு பையன் ஐஏஎஸ் எழுதின மாதிரியிருக்கு!
-ஆர்.எஸ்.அந்தணன்