கோடிகளை குவிக்க பிச்சைக்காரனுடன் கூட்டணி! இது சினிமா ட்ரிக்?
ஒரு பவுர்ணமியில் ஹிட் ஹீரோவாகி, அடுத்த அமாவாசைக்கு முற்றிலும் இருட்டாகிவிடுகிற அநேக ஹீரோக்கள், அதற்கப்புறம் தலை கீழாக நின்று பார்த்தும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறார்கள். ‘வளர்ச்சியும் வேகமும் சீரா இருக்கணும். வாழ்க்கை எப்பவும் ஜோரா இருக்கும்’ என்று நம்புகிறவர் போலிருக்கிறது விஜய் ஆன்ட்டனி. மிக மெதுவாக துவங்கி, நிதானமான வேகத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறார். நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் வெற்றிகளுக்கு பின் இவர் நடித்து மார்ச் 4 ந் தேதி வெளிவரவிருக்கும் பிச்சைக்காரனுக்கு விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் வட்டாரங்களில் வரவேற்பு எப்படி?
பிரமாதம் என்கிறது முதல் தகவல் அறிக்கை!
முதல் கட்ட அவஸ்தையை தாண்டிவிட்டது படம். சென்சார் அமைப்பு பிச்சைக்காரனுக்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதுபோதாதா? வரிவிலக்கு கிடைக்குமே! தியேட்டர்காரர்களின் முதல் சந்தோஷம் அங்கு ஆரம்பிக்க, மளமளவென தியேட்டர்கள் புக் ஆக ஆரம்பித்திருக்கிறதாம் பிச்சைக்காரனுக்கு. இதுவரைக்கும் 350 தியேட்டர்கள் உறுதி என்கிறது நம்பத்தகுந்த வட்டாரங்கள். இது ரஜினி கமல் அஜீத் விஜய்களுக்கு அடுத்த வெலல் ஹீரோக்களுக்கு கிடைத்து வருகிற எண்ணிக்கை!
அதற்கப்புறம் படத்தின் இயக்குனர் சசி! படம் இயக்குகிற விஷயத்தில் நிதானி. ஆனால் நின்று அடிக்கிற கெப்பாசிட்டி உள்ளவராச்சே? சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் என்று பல்வேறு ஹிட்டுகளை கொடுத்திருப்பவர் என்பதால், பிச்சைக்காரனுக்கு மேலும் ஒரு டிக் மார்க் அடித்திருக்கிறது வியாபார வட்டம்!
அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. பேட்டிகளில் பெருமை கொப்பளிப்பதில்லை. எப்போதும் நிதானமாக இருக்கும் விஜய் ஆன்ட்டனி, பிச்சைக்காரன் மூலம் தன்னை நம்பிய விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் கோடீஸ்வரனாக்குவார் என்ற நம்பிக்கை பரவலாக வந்திருக்கும் இந்த நேரத்தில் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது?
கே ஆர் பிலிம்ஸ் மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளியிடும் ஸ்கை லார்க் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்பு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்கிறார் கே ஆர் பிலிம்ஸ் சரவணன்.
ஆமென்!