கிஷோரின் சம்பள பாக்கி? பேரம் பேசுகிறாராம் பிரகாஷ்ராஜ்! பேதியுல போவுதுடா நீதி!
ஆடுகளம், விசாரணை, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட சுமார் பத்து படங்களுக்கு எடிட்டராக பணி புரிந்திருப்பார் கிஷோர். அதற்குள் அவரை காலம் கொண்டு போய்விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அவரது அப்பா தியாகராஜன் அன்றாட பிழைப்புக்கே அவஸ்தை படுகிற நிலைமை. அவ்வப்போது தனுஷும் வெற்றிமாறனும் சிறிய அளவில் உதவி வந்தாலும், கிஷோருக்கு பயணம் படத்தில் பணிபுரிந்த வகையில் மூன்றரை லட்சம் சம்பள பாக்கி தர வேண்டியிருக்கிறதாம் பிரகாஷ்ராஜ்.
இந்த பணத்தை கேட்டுதான் கிஷோர் இறந்த நாளிலிருந்தே போராடி வருகிறார் தியாகராஜன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாமல் மீடியாவுக்கு வந்துவிட்டார். அதற்கப்புறமும் ஏமாற்ற முடியாது என்பதை அறிந்து கொண்ட பிரகாஷ்ராஜ், தனது மேனஜரை விட்டு தியாகராஜனிடம் பேசியிருக்கிறார். “நம்ம ஆபிஸ் லேப் டாப் ஒண்ணு அங்க இருக்கு. அதை கொடுத்துருங்க. அப்படியே ஒரு லட்சம் தர்றோம். போதும்னு சொல்லிட்டு வாங்கிக்குங்க” என்கிறாராம் அவர்.
‘‘அந்த லேப் டாப் எனக்கெதுக்கு தம்பி? எப்ப வேணும்னாலும் வந்து எடுத்துக்கங்க. ஆனால், தர வேண்டிய பணத்தை குறைக்காம கொடுங்கப்பா” என்கிறாராம் கிஷோரின் அப்பா.
ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. பிரகாஷ்ராஜ் ஸ்டார் ஓட்டலில் ‘தண்ணீராக’ செலவழிக்கும் ஒருவேளை பில் தான் அந்த மூன்று லட்சம். இறந்து போன ஒரு கலைஞனின் குடும்பத்திற்கு இது கூடவா செய்ய முடியாது. போதும்யா ஒங்க கேடு கெட்ட பேரம்…