ரஜினிசார் கூட இந்த ஸ்கிரீன்ப்ளேவை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டாரு… நான் சிகப்பு மனிதன் பற்றி விஷால்
மலையாளத்தில் மோகன்லாலுக்கு போக வேண்டிய கதையை வழியிலேயே மடக்கி தனதாக்கிக் கொண்டிருக்கிறார் விஷால். அந்த கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’.
இந்த மடக்குதல் அனுபவத்தை அதே திக்குவாய் மாறாமல் சொன்னார் விஷால். (பாண்டியநாடு படத்தில் திக்குவாய் காரராக நடித்தாலும் நடித்தார், இப்போதெல்லாம் மேடைப்பேச்சில் அந்த நாக்கு அநியாயத்துக்கு போக்கு காட்டுகிறது விஷாலுக்கு)
இந்த படத்தின் நான் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே ஏன் திரு படத்தில் திரும்ப திரும்ப நடிக்கிறீங்க? யோசிக்கலாமேன்னுதான் நிறைய பேர் சொன்னாங்க. ஆனா அவர் பெயருக்குரிய அங்கீகாரத்தை இந்த படத்தின் மூலம் அடையுறாரா இல்லையா பாருங்க. இந்த கதையை அவர் எங்கிட்ட சொன்னது சும்மா கருத்து சொல்றதுக்காகதான். மோகன்லாலுக்கு சொல்றதுக்காக கேரள கிளம்பிட்டு இருந்தார். கேட்டதும் உடனே இந்த கதையில் நான் நடிக்கிறேன்னு சொன்னேன். நார்கோ லேப்ஸிங்கிற ஒரு வியாதியால் பாதிக்கப்பட்ட கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன்.
ஆக்சுவலா இந்த வியாதி உள்ளவங்க அதிர்ச்சியோ, அதிகப்படியான சந்தோஷமோ எது அடைஞ்சாலும் உடனே உறங்கிடுவாங்க. இந்த ‘நாட்’ கேட்கும்போதே எனக்கு த்ரில்லிங்கா இருந்திச்சு. ரஜினி சார் கூட இந்த கதையை கேட்டுட்டு அப்படின்னா இந்த கதையின் ஸ்கிரீன்ப்ளே எப்படி போவும்னு தெரிஞ்சுக்க ரொம்ப எக்சைட்டிங்கா இருக்குன்னு சொன்னாரு. அப்படின்னா விஷால் சார் படத்துல சண்டை போட மாட்டாரான்னு சிலர் கேட்கிறாங்க. எல்லாத்துக்கும் படம் ரிலீஸ் ஆகுற வெள்ளிக்கிழமைதான் பதில் சொல்லணும் என்றார் விஷால்.
படத்தில் லட்சுமிமேனனுக்கும் இவருக்கும் லிப் கிஸ் இருக்கிறது. அதை ஒரே டேக்கில் எடுத்ததாக கூறிய விஷால், இந்த லிப் கிஸ் எந்த விதத்திலும் தப்பான ஒரு பார்வையை தராது. கதைக்கு ரொம்ப அவசியமான கிஸ்சும் கூட என்றார்.
பக்கத்திலேயே இருந்த லட்சுமிமேனனிடம், கதைக்கு தேவைப்பட்டதால் விஷாலுக்கு லிப் கிஸ் கொடுக்க ஒப்புக் கொண்டதா சொன்னீங்க. கதைக்கு தேவையா இருந்தா யாருக்கு வேணும்னாலும் லிப் கிஸ் கொடுப்பீங்களா என்றொரு கிடுகிடு கேள்வியை நிருபர் ஒருவர் கேட்டு வைக்க, லட்சுமிமேனனின் குழந்தை முகத்தில் பலத்த அதிர்ச்சி. அதெப்படி சார்? என்றார் அப்பாவியாக.
படத்திற்கு நியாயமாக நான் மச்சக்கார மனிதன் என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்?