குந்துனாப்ல வந்து குழப்பிவிட்டுட்டீங்களே சார்ஸ்!

மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய ஆரவாரத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய படம் ஜோக்கர்! போட்ட பணத்தை சேட்டிலைட் உரிமையிலேயே எடுத்துவிடுவார்கள் என்று இன்டஸ்ட்ரி இன்புற்றுக் கொண்டிருக்க, அப்படத்தின் இயக்குனர் ராஜு முருகனுக்கோ தீராத குழப்பம். எல்லாம் அந்த பாராட்டு விழாவால்தான்.

ஜோக்கர் படத்தின் வெற்றியை அறிவிக்கும் பொருட்டு ஒரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு சிறப்பு விருந்தினராக மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மற்றும் நடிகர் சிவகுமார், எடிட்டர் மோகன், ராஜு முருகனின் குருநாதர் லிங்குசாமி ஆகியோர் வந்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பேசிய லிங்குசாமி, படத்தில் எனக்கு தோன்றிய மூன்று திருத்தங்கள் என்று பட்டியலிட்டார். அதாவது க்ளைமாக்சில் பொன்னூஞ்சல் பேசும் அந்த வசனம் தேவையில்லாதது. மற்றொன்று… மற்றொன்று என்று அவர் சொல்லிக் கொண்டே போக, லிங்குசாமி ஏன் தொடர்ந்து தோற்று வருகிறார் என்பது அவரது ஆலோசனையில் இருந்தே தெரிந்தது. அதை விடுங்கள்…

மனுஷன் ராஜுமுருகனுக்கு ஒரு அட்வைஸ் செய்தார். இந்த மாதிரி சீரியஸ் படங்களை எடுக்கறதை விட்டுட்டு நல்ல நகைச்சுவை படங்களையும் ராஜுமுருகன் இயக்கணும் என்பதுதான் அந்த ஆசை. (தமிழ்சினிமாவில் யாரோ ஒரு ஆளு அபூர்வமா இப்படி கிளம்பியிருக்கிறாரு. அது பொறுக்கலையா அண்ணே?)

நல்லவேளையாக பின்னாலேயே பேச வந்த சிவகுமார், “ராஜுமுருகன் இந்த மாதிரி 400 படங்கள் கூட எடுக்க முடியும். அவ்வளவு விஷயம் வச்சுருக்கான். குடுகுடுப்பை காரன் பற்றி எழுத வேண்டும் என்றால், அந்த குடுகுடுப்பை காரனுடன் விடியற்காலை நாலு மணிக்கு சுடுகாட்டில் போய் படுத்துக்கிடந்துவிட்டு எழுதுவான். பிணம் தின்னும் அகோரிகளுடன் பத்து நாட்கள் வாழ்ந்தவன் அவன். தொடர்ந்து இந்த சமூகத்திற்கு தேவையான படங்களை மட்டும் அவன் எடுக்கணும். அதுதான் என் விருப்பம்” என்றார்.

ராஜு முருகன் மதிக்கக்கூடிய இரண்டு பேரும் இரண்டு விஷயத்தை சொன்னால், அந்த படைப்பாளி என்னதான் செய்வார்? குந்துனாப்ல வந்து குழப்பிவிட்டுட்டு போயிட்டீங்களே சார்ஸ்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
A film director suffered by lady ghost.

https://www.youtube.com/watch?v=UK5bUhXQMtA&feature=youtu.be  

Close