சங்கிலி புங்கிலி கதவ பூட்டு?
‘வாலிபால் கிரவுண்ட்ல கோலி விளையாடுற கூட்டம் பெருகியதால்தான் சினிமாவுக்கு ஒரு மரியாதை இல்லாம போச்சு’ என்கிற ஏச்சு பேச்சை இன்னும் எத்தனை காலத்திற்குதான் பொறுத்துக் கொள்வது? பொருத்தமான நபர்கள், பொருத்தமான நேரத்தில் சினிமாவுக்குள் வந்தால் அல்லவா சினிமா பிழைக்கும்? இந்த ஏக்கத்திற்கு ஒரு முடிவு கட்ட கிளம்பிய ஷங்கர் மாதிரியான ஜாம்பவான்களுக்கே ஆறிப்போன தயிர்வடையை கொடுத்து ‘அப்பாலே போ…’ என்று கூறிவிட்டது சினிமாவும், அதன் சூழ்ச்சிக்குட்பட்ட வியாபாரமும்.
ஆனால் என்னால் முடியும் தம்பி… என்று கிளம்பி வந்த அட்லீக்கு என்ன வடையை கொடுக்கப் போகுதோ? இந்த அச்சம் நமக்கு ஒருபுறம் வந்தாலும், அட்லீயின் துணிச்சலுக்கும் ஆர்வத்துக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட வேண்டியதுதான். என்ன துணிச்சல், என்ன ஆர்வம்?
‘சங்கிலி புங்கிலி கதவை திற’ என்கிற படத்தை தயாரித்திருப்பது டைரக்டர் அட்லீதான். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் அவர், அதற்கப்புறமும் இரண்டு இயக்குனர்களை அறிமுகப்படுத்தவிருக்கிறார். ஒருவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா. இன்னொருவர் அட்லீயின் அசோசியேட் அசோக். ச.பு.க.தி யில் அட்லீயால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் அய்க், (பயப்படாதீங்க. இவர் பெயர் ஐயப்பன். அதை சுருக்கிதான் அய்க் ஆகியிருக்கிறார்) பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரன். எம்.ஆர்.ராதாரவியின் தங்கை மகன்!
முழுக்க முழுக்க பேய் காமெடிப் படமான ‘சங்கிலி புங்கிலி கதவ திற’ படத்தின் வசூல் தாறு மாறாக அமையும் போலதான் தெரிகிறது. அப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் ஒரு சிறப்பான பேய் படத்திற்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருப்பதால், வருகிற கலெக்ஷனை காப்பாற்ற ஒரே வழி…..
சங்கிலி புங்கிலி கதவ இறுக்கமா பூட்டு!