சமுத்திரக்கனிக்கு வழிவிட்ட சண்முகபாண்டியன்! இனி ஜெயிச்சுருவீக தம்பி
கேப்டன் விஜயகாந்த்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தமிழ்சினிமா கொடுத்த முதல் மார்க்கிலேயே சிலேட்டு உடைச்சு, பலப்பமும் பீஸ் பீஸ்! சகாப்தம் என்கிற அந்தப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் ஷோவே முட்டை. அப்படத்தை இயக்கி வந்த சந்தோஷ் என்பவரை கன்னத்தில் அறைந்து பாதி படத்துடன் விரட்டிவிட்ட கேப்டன், மிச்ச படத்தை தானே இயக்கியதெல்லாம் நாடறிந்த விஷயம்தான்.
தமிழ்சினிமாவை பல வருஷம் ஆண்டு வந்த ஒரு ஜாம்பவான் தன் மகனை இப்படியா அறிமுகப்படுத்துவது என்று கேள்வி கேட்கிற ஆசை பலருக்கும் இருந்தாலும், தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க… என்ற ஒரு மிரட்டலுக்கு அஞ்சி ஒதுங்கிக் கொண்டார்கள். நல்லவேளை… தானாகவே உணர்ந்துவிட்டார் கேப்டன். மகன் சண்முக பாண்டியனின் இரண்டாவது படத்தில் அவரது தலையீடு முற்றிலும் இல்லை. பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா அவரே ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சிம்பிளாக நடந்தது.
அதில்தான் ஒரு பேரதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யம். படத்தின் ஹீரோ சண்முக பாண்டியனின் படத்தை போஸ்டரில் போடவே இல்லை. இசை வெளியீட்டு விழாவின்போது பலராலும் கவனிக்கப்படும் இடத்திலும் சண்முக பாண்டியன் ஸ்டில் இல்லை. ஆனால் இந்த வருத்தம் ஏதும் சண்முக பாண்டியனுக்கு இல்லை. மகிழ்ச்சியோடும் ஈகோ இல்லாமலும் இந்த எளிய நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்பா தூக்கி வீசுன சேரை, பையன் அமைதியா பிடிச்சு ஒரமா வைப்பார் போலிருக்கிறது. இந்த அடக்கமும் நிதானமும்தான் வளர்ச்சிக்கு வழி. நல்லா வருவீங்க சண்முக பாண்டியன்!