ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு கோவில் கட்டி கும்பிடணும்!

‘இதுதான் ரஜினியின் நகம்! படப்பிடிப்பின் போது அவர் விரலிலிருந்து விழுந்ததை ரசிகர்களின் பார்வைக்காக அர்ப்பணிக்கிறோம்!’ என்று அம்புக்குறியிட்டு விளக்கி, அது குறித்து தனி கட்டுரை எழுதுகிற அளவுக்கெல்லாம் பில்டப்புகளை கிளப்பி பி.பி.யை எகிற வைத்த இயக்குனர்களும், அவர் தம் அட்ராசிடிகளும் பா.ரஞ்சித் என்ற பண்பட்ட இயக்குனரின் முன் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. படம் ஆரம்பித்த நாளில் இருந்தே அவ்வப்போது கபாலி பட ஸ்டில்கள் தாமாகவோ, அல்லது திட்டமிட்டோ வெளிவர அனுமதித்த அவரது பெருந்தன்மைக்கு ரஜினி ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்டாலும் ஈடாகாது.

படப்பிடிப்பு முடிவடைந்து பிற்பகுதி வேலைகளை துவங்கியிருக்கிற இந்த நேரத்தில் கணிசமான ஸ்டில்களை ஆனந்த விகடனுக்கு வழங்கி, அப்பத்திரிகையின் மூலம் நாட்டு மக்களுக்கும் கிடைக்க வழி செய்திருக்கிறார் அவர். (ஆ.வி. க்கு இணையான வேகத்தில் விற்று வரும் பிற பத்திரிகைகள் அவர் மீது கொலவெறியில் இருப்பது வேறு விஷயம்) இந்தப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை கூறியிருக்கும் அவர், படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கும் மற்றவர்களுக்கும் என்னென்ன ரோல் என்று கூறியிருப்பது வரவேற்கக் கூடிய விஷயம்.

அதுவும் தன்ஷிகா பற்றி கூறியிருக்கும் அவர், கபாலிக்காக செய்த தியாகத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ரஜினிக்கு எதிராக வில்லங்கம் பண்ணும் தாய்லாந்து நாட்டு கேங் லீடராம் தன்ஷிகா. மிக நீண்ட கூந்தலுக்கு சொந்தக்காரரான அவரிடம், முடியை பாய் கட்டிங் மாதிரி வெட்டணும் என்று கூறியவுடன் மறுநாளே கூந்தலை தியாகம் செய்துவிட்டு பாய்ஸ் கட்டிங்கோடு வந்து நின்றாராம். (ரஜினியோட மோதுறதுன்னா சும்மாவா?) தன்ஷிகாவை வாயார பாராட்டிய பா.ரஞ்சித், ரஜினி சாருக்கு பஞ்ச் டயலாக் இல்லை என்று கூறியிருக்கிறார்.

அதுதான் வாத்யாரே இடிக்குது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புதுப்படம் எங்க எப்போ எத்தன ஷோ விபரம் உள்ளே – [04-03-16]

Close