சிம்புவும் கமல்ஹாசனும் ஒண்ணா? பரபரப்பை கிளப்பிய பாண்டிராஜ்!
எங்கு போனாலும் சிம்புவின் புகழ் பாடாமல் ஓய்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் போலிருக்கிறது இயக்குனர் பாண்டிராஜ். என்ன பண்ணுவது? அவர் வலி அவருக்கு!
இன்று சென்னையில் நடந்த ‘தூங்காவனம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஒரு மினி நடிகர் சங்க விழா போலிருந்தது. கமல் பட விழாவில் இதற்கு முன்பு சும்மா வேடிக்கை பார்க்கும் ஆசாமிகளாக கூட கலந்து கொள்ளாத பல நடிகர்கள் அங்கு ஆஜராகியிருந்தார்கள். எல்லாம் கமல் பாண்டவர் அணிக்கு சப்போர்ட் செய்யும் காரணத்தால்தான். முக்கியமாக விஷாலும் அங்கு வந்திருந்தது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அவர் பேசியதெல்லாம் இருக்கட்டும்… இயகுகுனர் பாண்டிராஜ் பேசும்போது செம விசில்!
“என் ஷுட்டிங்குக்கு சிம்பு வழக்கம் போல லேட்டாகவே வந்துகிட்டு இருந்தார். நான் அவரிடம் இது பற்றி கேட்டபோது, ‘சின்ன வயசுலேர்ந்து நடிச்சுட்டு இருக்கேனா, அதான் கொஞ்சம் போரடிக்குதுஜி’ என்றார். அப்போது நான் அவரிடம், ‘கமல் சார் இத்தனை வருஷமா நடிச்சுட்டு இருக்காரு. அவருக்கே போரடிக்கல. உங்களுக்கு ஏன் போரடிக்கணும்?’ என்று கேட்டேன். அதுக்கு சிம்பு, ‘என்னை கமல் சாரோட ஒப்பிடாதீங்க. அவரை மாதிரியெல்லாம் வர்றது ரொம்ப கஷ்டம்’ என்றார்” என்று வந்த இடத்திலேயும் தன் வலியை இறக்கி வைக்க, குஷாலாக கைதட்டியது கூட்டம்!
“ஒரே வருஷத்தில் கமல் சார் நாலு படம் நடிச்சுட்டார். இப்ப வர்ற யங் ஹீரோஸ் அவர்ட்ட நிறைய கத்துக்கணும். நானும் கமல் சாரை வச்சு படம் பண்றதுக்கு ஆவலா இருக்கேன். எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க சார்…” என்றார் பாண்டிராஜ்.
ஏராளமான டி.வி, மற்றும் இன்டர்நெட் கேமிராக்கள் விழாவை முழுங்கிக் கொண்டிருக்க, உச்சத்தில் அவ்வப்போது பறந்து பறந்து படம் பிடித்த மினி ஹெலிகேம் ஒன்று அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. முதல் தடவையாக ஒரு சினிமா விழாவை அவரவர் மண்டைக்கு மேல் பறந்து ஹெலிகாமில் படம் எடுத்ததை மொத்த கூட்டமும் வியப்பாக பார்த்தது. இதிலென்ன வியப்பு? இது கமல்ஹாசன் விழாவாச்சே! இப்படியெல்லாம் இல்லாமலிருந்தால்தான் வியப்பு.
//முதல் தடவையாக ஒரு சினிமா விழாவை அவரவர் மண்டைக்கு மேல் பறந்து ஹெலிகாமில் படம் எடுத்ததை மொத்த கூட்டமும் வியப்பாக பார்த்தது. இதிலென்ன வியப்பு?//
அட போப்பா. இப்பல்லாம் கல்யாணம், காதுகுத்து விழாக்களிலயே வந்துருச்சே.