சிம்ரன் வீட்டுக்கு படையெடுக்கும் இயக்குனர்கள்
கோடம்பாக்கத்தில் தெருவுக்கு நாலு டைரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் மாவட்டத்திற்கு ஒருவர் கூட இல்லை. இதனால் தெருவெங்கும் கனவுகளோடு திரியும் இயக்குனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கிற சில திறமைசாலிகள் தானும் பிழைத்து தயாரிப்பாளர்களையும் பிழைக்க வைக்கிறார்கள். அதில்லாத ஆர்வ கோளாறுகள் பணத்தோடு வருகிற தயாரிப்பாளர்களை ஓட்டாண்டியாக்கி ஓட வைக்கிறார்கள்.
சினிமாவில் இத்தனை கால அனுபவம் இருந்தும், முன்னணி ஹீரோக்களான விஜய் அஜீத் கால்ஷீட் கிடைத்தால் சொந்தப்படம் எடுக்கலாம் என்று காத்திருந்த சிம்ரன், அதற்கு வழியில்லை என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டார். இருந்தாலும் புதுமுகங்களை வைத்து சிறு பட்ஜெட்டில் படம் எடுத்து வெளியிட்டால் என்ன என்று நினைத்தாராம். ‘நல்ல கதையுள்ளவர்கள் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்கள் என்னை அணுகலாம்’ என்று செய்தியை பரப்பி விட்டிருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்துள்ள தனது வீட்டையே சினிமா அலுவலகமாக வைத்திருக்கிறார். அவரை தேடி கதை சொல்ல கிளம்பியிருக்கிறார்கள் பல புது இயக்குனர்கள். சிம்ரனை வாழ வைங்கப்பா… !