தமிழ் படம் 2 / விமர்சனம்
‘நெஞ்சில் நின்றவை’களையெல்லாம் மறுபடியும் தேடி, கண் முன்னே வைத்து ‘கலவரம்’ பண்ணியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். கிண்டல் இல்லாத வாழ்வு, சுண்டல் இல்லாத படையலுக்கு ஒப்பானதல்லவா? சிரிக்கிறது தியேட்டர். “அட இதுக்கெல்லாமா சிரிக்கறது… உங்களுக்கெல்லாம் மரை கழண்டு போச்சா?” என்று ஆங்காங்கே எரிச்சல் பட்டாலும், இந்த ‘ஸ்பூப்’ ஆஃப் பண்ணுகிறது நம் கவலைகளை!
ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் என்று தமிழ்சினிமாவின் முக்கியஸ்தர்களெல்லாம் முக்கி திணறுகிறார்கள் இங்கே! “நான் எப்ப வருவேன்… எப்படி வருவேன்னு தெரியாது. ஏன்னா நான் வரவே மாட்டேன்” என்கிற டயலாக்குக்கு ‘அவரோட’ ரசிகர்களே கைதட்டினாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் சொல்வது மிர்ச்சி சிவாவாச்சே! இவர் வாயை திறந்தாலே யார் மீதாவது பிளேடு விழுகிறது. அதுவும் இலகுவாக செஞ்சு முடிப்பதில்(?) மனுஷன் கில்லாடியாக இருக்கிறார்.
ஒரு காட்சியில் விவேகம் அஜீத்தை அவர் கண்முன் நிறுத்தத் துடிக்கிறாரே… இதயத் துடிப்பே நின்று விடுகிறது நமக்கு.
“உன்னை லூசுன்னு நினைச்சுதான் காதலிச்சேன். நீ டாக்டர்னு தெரிஞ்சுருந்தா காதலிச்சுருக்கவே மாட்டேன்” என்று சிவா புலம்புவதெல்லாம் ஐய்யோ ஐயய்யோ… நிறைந்த தாடியும் நிறைமாத பாடியுமாக நர்ஸ் யூனிபார்மில் வந்து நிற்கும் சந்தான பாரதியிடம், ஹீரோயின் சிஸ்டர் சிஸ்டர் என்று பேசுவது பயங்கரம். அந்த ஒரு காட்சியில் தியேட்டரை துவம்சமாக்குகிறார் ச.பா. (ரெமோவை கலாய்ச்சுட்டாங்களாமா)
ஒவ்வொரு காட்சியும் நகர நகர… யாரை சொல்றாய்ங்க? எந்த படத்தை அடிச்சாய்ங்க? என்று யோசிப்பதிலேயே கவனம் சிதறுவதால், கதை என்ற வஸ்த்தை யாரும் நினைத்ததாக தெரியவில்லை. இந்த வீன்னெஸ்சை புரிந்து வைத்திருக்கிற காரணத்தாலேயே கதை என்ற ஒரு ஐட்டத்தை தேடி மெனக்கடவும் இல்லை சி.எஸ்.அமுதன்.
எப்படியும் பார்ட் ஒன்னுடன் இந்த செகன்ட் பார்ட்டை ஒப்பிடாமல் இருக்கவே முடியாது. வெண்ணிறாடை மூர்த்தி, சண்முக சுந்தரம் இருவரும் இல்லாத இந்த பார்ட் 2 வெறுமையின் உச்சம்.
கஸ்தூரிக்கெல்லாம் கவர்ச்சி டான்சா? ஒங்க கண்ணையெல்லாம் புடுங்கி சங்கரநேத்ராலயாவுக்கு பார்சல் பண்ணிட்டா கூட தப்பில்லை.
இசை கண்ணன். தமிழ் வார்த்தைகளே இல்லாமல் அர்த்தமே இல்லாமல் அவர் போட்ட முதல் பார்ட் ட்யூன் ஒன்று இன்னமும் காதல் ரீங்காரமிடுகிறது. இதிலும் போட்ருக்கீங்களே… ஸ் யப்பா! அதுவும் எவ்வித சங்கடமும் இல்லாமல் அடிக்கடி மூக்கை நுழைத்து அறுவை போடுகின்றன பாடல்கள்.
லேட்டஸ்ட் படங்களை விட்டுவிட்டு எட்டு வருஷ பத்து வருஷ படங்களையெல்லாம் ஸ்பூப் பண்ணியிருக்கிறார்கள். அதுதான் பிரச்சனை. இப்படி பழைய படங்களை அள்ளிப் போட்டு டிகாஷன் வடித்ததால், கா(ப்)பியில் ருசி கம்மி.
டேஸ்ட் பாதி… வேஸ்ட் மீதி!
-ஆர்.எஸ்.அந்தணன்