தெருநாய்கள் – விமர்சனம்
ரோம் நகரம் பற்றியெறியும்போது பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம் நீரோ மன்னன்! மீத்தேன், மற்றும் எரிவாயு குழாய் பிரச்சனைகளால் தமிழகமே தீப்பற்றி எரியும் போது பிடில் வாசிக்க நான் ஒன்றும் நீரோ மன்னன் அல்ல. மனிதம் மிக்கவன் என்பதை இப்படத்தின் இயக்குனர் ஹரி உத்திரா நிரூபித்திருக்கிறார். உங்கள் சமூக அக்கறைக்கு ஒரு சல்யூட்டுங்க. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் நேரடியாக இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என்கிற வருத்தம் இல்லாமலில்லை.
மன்னார்குடி பகுதியில் நடக்கிறது கதை. லோக்கல் எம்.எல்.ஏ மதுசூதனன் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க நினைக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அதற்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலையில் நிலத்தை வாங்கித் தரும் தரகராக செயல்படும் இவருக்கும், ஸ்வீட் கடை நடத்தி வரும் இமான் அண்ணாச்சிக்கும் பிரச்சனை வர… அண்ணாச்சியை போட்டுத் தள்ளுகிறார் மது.
அப்புறமென்ன? அண்ணாச்சியின் நண்பர்களான பிரதீக், அப்புக்குட்டி, ஆறுபாலா, பாவல் நவகீதன் ஆகிய நால்வரும் மதுசூதனனை கடத்த திட்டம் போட்டு, அதை செவ்வனே செய்தும் முடிக்கிறார்கள். ஒருபுறம் எம்.எல்.ஏ ஆட்கள் தேட, மறுபுறம் மதுசூதனன் தப்பிவிடாமல் நண்பர்கள் கூட்டம் துன்புறுத்த… விறுவிறு வினாடிகளுக்குப் பின் எம்.எல்.ஏ என்ன ஆனார் என்பது க்ளைமாக்ஸ்.
பணத்திற்காக வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் இழக்க தயாராக இருப்பவர்கள்தான் தெருநாய்கள் என்று துணிச்சலாக கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்திரா. இந்த துணிச்சலுக்காக ஒரு சபாஷ்.
படத்தில் காதல் இருக்கிறது. ஆனால் கொஞ்சம்தான்!
பொதுவாக நிஜ சம்பவங்களை படமாக்கும்போது இருக்கும் ரிப்பீட் காட்சிகளை தவிர்க்க நினைத்திருக்கிறார் இயக்குனர். கதிராமங்கலம் போராட்ட களத்தின் கிளிப்பிஸ்க்ளை வைத்தே பாதி படத்தை நிரப்பியிருக்கலாம். ஆனால், இந்த பிரச்சனையை இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடப்பது போல கொண்டு போயிருப்பது சாமர்த்தியம்.
நல்ல கருத்துக்களை சொல்ல வரும் எவரையும் வாயார பாராட்டலாம் என்கிற கோட்பாட்டின்படி பார்த்தால், ஒளிப்பதிவு இசை திரைக்கதை என்று எதையும் நோண்டி நொங்கெடுக்காமல், ஓ.கே ஓ.கே என்று கடந்து போவதுதான் சிறப்பு.
அந்த வகையில், தெருநாய்களின் குரைப்பு கார்ப்பரேட் மற்றும் கட்சிக்காரர்களின் சங்கை அறுத்திருக்கிறது.
-ஆர்.எஸ்.அந்தணன்