விரதம் முடிந்தது! வில்லன் ஆகிறார் மம்பட்டியான்!

மகனுக்காக தன் ஆசைகளை விட்டுக் கொடுக்கும் அப்பாக்களில் முதலிடத்தில் இருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன். மார்க்கெட்டில் நல்ல இடத்திலிருந்த நேரத்திலேயே தன் மகன் பிரசாந்தை ஹீரோவாக்கிய தியாகராஜன், அதற்கப்புறம் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போதெல்லாம், “பிரஷாந்த் நடிக்கிறார். அவருக்கு நான் துணையா இருக்கேன். அது போதும்” என்று கூறி வந்தார். அவர் துணையாக இருந்தாரா, தொல்லையாக இருந்தாரா என்பதையெல்லாம் காலமும், பிரசாந்துக்கு அந்த காலம் தந்த இடமும் நிரூபித்துக் கொண்டிருக்க, மீண்டும் நடிப்பு ஆசை வந்திருக்கிறதாம் மிஸ்டர் மம்பட்டியானுக்கு.
விஜய் ஆன்ட்டனி ஹீரோவாக நடிக்கும் ‘எமன்’ படத்தில் வில்லனாக ரீ என்ட்ரி ஆகிறார் தியாகராஜன். படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர்,
“இந்த கேரக்டரில் தியாகராஜன் நடிச்சா நல்லாயிருக்கும்” என்று இவர் கருத, அவருக்கு பச்சைக் கொடியும் காட்டிவிட்டார் விஜய் ஆன்ட்டனி. அதற்கப்புறம் தியாகராஜனை எப்படியோ கன்வின்ஸ் செய்து நடிக்க சம்மதம் வாங்கிவிட்டார் ஜீவா சங்கர்.
எத்தனை காலம் மண்ணுல கிடந்தாலும், நிலக்கரிக்குள் மின்சாரமும் நெருப்பும் ஒளிந்திருப்பதை போல, தியாகராஜனிடம் ஒளிந்திருக்கும் அந்த வில்லத்தனத்தை வெளியே கொண்டு வரப்போகும் ஜீவா சங்கரின் முயற்சிக்கு, பிரசாந்த் ரசிகர்கள் சார்பில் நன்றி.
இனிமேலாவது அவரு சுதந்திரமா செயல்பாடுவாருல்ல?
