டபுள் மீனிங்னா பரவால்ல…ஆனால்? பேரதிர்ச்சிக்கு ஆளான த்ரிஷா

சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த பேராபத்திலிருந்து விலகவிருக்கிறார் என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் பேரலையாக உருவெடுத்து, பெரு மழையாக இடி இடித்துக் கொண்டிருந்ததல்லவா? அந்த சம்பவம் நடந்தேவிட்டது. தான் வாங்கிய பத்து லட்சம் அட்வான்சை மேள தாள முழக்கங்களோடு திருப்பிக் கொடுத்துவிட்டார் அவர். ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ பட இயக்குனர்தான் இவ்விருவரையும் வைத்து படம் பண்ண துடித்தவர். (நிஜமாகவே த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று போவாரோ என்னவோ?)
இந்த கதையை கேட்டதிலிருந்தே கதி கலங்கிப் போய்விட்டாராம் த்ரிஷா. ஏன்? படத்தில் டபுள் மீனிங் இருக்கலாம் தப்பில்லை. ட்ரிப்பிள், போர், ஃபைவ் மீனிங்கையெல்லாம் தாண்டுகிற அளவுக்கு இருக்கிறதாம். “ஓடற படத்துல இருக்கறது நல்லதுதான். ஆனால் இன்டஸ்ட்ரியை விட்டே விரட்டுற படத்துல இருக்கணுமா மம்மி?” என்று த்ரிஷா கேட்டதற்கு, மம்மி பதில் “நோ நோ…!” அப்புறமென்ன… தேன் வலை வீசி, மீன்களை பிடிக்கக் கிளம்பியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
மீன் சிக்குதோ, இல்லை வலை கிழியுதோ? அது அவரது அதிர்ஷ்டத்தை பொருத்த விஷயம்.
