இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்!
‘ஆடுப்பா… தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு முக்காலியாவதை அறிந்து தரையில் கிடந்து உருண்டதெல்லாம் கோடம்பாக்கத்தின் தினசரி வரலாறு. நேற்றைய உளுந்து, இன்றைய அப்பளம், நாளைய நமநமப்பு என்கிற நிலை நமக்கு நிச்சயம் என்பதை அறியாமல் ஆட்டம் போடும் ஹீரோக்கள்தான் இங்கு எத்தனை எத்தனை பேர்?
லேட்டஸ்ட் உதாரணம் பாபிசிம்ஹா. அவர் மனம் விரும்பி நடித்த பல படங்களையே கூட “நான் அதில் நடிக்கவில்லை. என் போட்டோவை வைத்து பம்மாத்து காட்டுகிறார்கள்” என்று அப்பட்டமாக பொய் சொன்னவராச்சே? ஒரு படம் ஓடிய நேரத்தில் என் சம்பளம் இவ்ளோ என்று அவர் விரல் காட்டியதை பார்த்த மாத்திரத்தில் மயங்கி விழுந்தவர்கள், “தம்பி விழட்டும்… கைதட்டுவோம்” என்று காத்திருந்த கதையெல்லாம் ஒன்று இரண்டல்ல. நிறைய நிறைய.
ஜிகிர்தண்டாவுக்கு அவர் நடித்த படங்கள் ஒன்று கூட ஓடவில்லை. ஜிகிர்தண்டாவுக்கு பின் அவருக்கு பெரிய சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்கள் பலர், தண்டமா போச்சே என்று அழுது வடிந்ததும் நடந்தது. சரி… இப்போது என்னவாம்?
அவரே தயாரித்து அவரே ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட முன் வந்த தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது இறைவி பிளாப்புக்கு பின் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. அவரை அழைத்து, உங்க படம் வேணாம் சார். நீங்களே ரிலீஸ் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டார்களாம்.
கவுரவம் திமிரெல்லாம் காடா துணி மாதிரி. நிமிஷத்துல வெளுத்துரும்! இது யாருக்கு புரியலேன்னாலும் பாபி சிம்ஹாவுக்கு இப்ப புரிஞ்சுருக்குமே?