கத்தி படத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து விஜய் போராட்டம்?
கலைஞர் ஆட்சியிலிருக்கும் போது எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாம் கலைஞர் ஆட்சியை கண்டந்துண்டமாக கூறு போடுவார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ’ என்றும், ‘தாங்கள் வாழ்வதற்கு ஊர் பணத்தில் வீடு கட்டினார்’ என்றும் பாட்டாலேயே போட்டுத் தாக்குவார். கலைஞர் மட்டும் சும்மாயிருப்பாரா? எம்ஜிஆர் ஆட்சியிலிருந்த இவர் வசனத்தில் வந்த படங்கள் எல்லாம் எம்ஜிஆரின் ஆட்சியை ரவுண்டு கட்டி அடித்தது.
இப்போதெல்லாம் அப்படிப்பட்ட படங்கள் வருவதேயில்லை. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்றாகிவிடுகிறார்கள். ஒரு வகையில் இப்படி இவர்கள் சேஃப்ட்டி பார்த்தாலும், விதி அமைதியாகவா இருக்கிறது. கதை என்ற பெயரில் உள்ளே தலையை நுழைத்து, உபத்திரவத்தை கொடுத்துவிடுகிறது. கத்தி படத்தின் கதையாலும் கூட விஜய்க்கு பிரச்சனை வரலாம் என்கின்றன லேட்டஸ்ட் தகவல்கள். லைக்கா மொபைல், ராஜபக்சே தம்பியின் கூட்டாளி, இவர்களின் கூட்டு தயாரிப்பு என்று கத்தியை சுற்றி கசமுசாக்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் ஈசியாக தாண்டி திரைக்கு வந்துவிடுவார் விஜய் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த நேரத்தில்தான் இந்த படத்தின் கதையும் கசிந்து, ‘என்னது… விஜய் அரசாங்கத்துக்கு எதிரா முழங்குகிறாரா?’ என்ற கேள்வியை விதைத்திருக்கிறது.
படத்தில் இரண்டு விஜய். இருவரில் ஒருவர் நல்லவர். மற்றவர் கெட்டவர். திடீரென அந்த ஊரில் பெப்சி கோக் மாதிரி ஒரு குளிர்பான நிறுவனத்தின் தொழிற்சாலை வருகிறது. இதற்கு அனுமதி கொடுத்ததே அரசாங்கம்தான். தொழிற்சாலை இயங்க ஆரம்பித்தால் நிலத்தடி நீர் கோயிந்தா. இதையெல்லாம் மனதில் கொண்ட விஜய், அனுமதி கொடுத்த அரசாங்கத்தையும், அந்த தொழிற்சாலை வருவதையும் எதிர்க்கிறார். மக்களை சேர்த்துக் கொண்டு போராட்டம் செய்கிறார் என்று போகிறதாம் கதை.
அனுமதி கொடுத்த அரசு அதிகாரிகளை எதிர்த்து விஜய் பேசும் வசனங்கள் நிச்சயம் ஆளுங்கட்சிக்கு சந்தோஷத்தை தரப்போவதில்லை என்கிறார்கள் இப்பவே!
ஹ்ம்ம்ம் கெண்டை மீனை ருசிக்கிறேன்னு கொண்டை ஊசிய முழுங்கிராதீங்க விஜய்!