மனசு புண்படும்னா அதை செஞ்சுருக்கவே மாட்டோம்! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்! விஜய் சேதுபதியின் அடுத்த விருந்து இது. ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். படத்தில் எச்.ராஜா அண் கோ வயிறெரிவது போல சில டயலாக்குகள் இருந்தன. ஒரு கட்டத்தில் அவற்றையெல்லாம் ஈவு இரக்கம் பார்க்காமல் வெட்டித் தள்ளினார் ஆறுமுக குமார். அந்த ராவண, ராமன் வசனங்கள் பெரும் சர்ச்சை ஆவதற்குள் வெட்டித் தள்ளியது நல்ல விஷயம்தான்.
ஆனால் இப்படியொரு வசனத்தை பேசும்போது பின்னால் பிரச்சனை வரும் என்று யூகிக்கவில்லையா விஜய் சேதுபதி? நேற்று அவரை சந்திக்கிற நேரத்தில் இப்படியொரு கேள்வி எழுப்பப்பட மனுஷன் வாயிலிருந்து அப்படியொரு பக்குவமான பதில்.
‘சத்தியமா தெரியாது. கேஷுவலாதான் பேசியிருந்தேன். மற்றவர்கள் மனசு புண்படும்னு தெரிஞ்சுருந்தா அந்த டயலாக்கை பேசியிருக்கவே மாட்டேன்’ என்றார் ஓப்பனாக. படத்தில் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் கவுதம் கார்த்திக். ‘ஷுட்டிங் சமயத்தில் விஜய் சேதுபதியண்ணனை ரசிக்கறதும் அவர்ட்ட அட்வைஸ் கேட்டுக்கறதும்தான் என்னோட வேலையா இருந்திச்சு. அதே போல, எனக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு கேட்டு கேட்டு அதை அதிகப்படுத்திக் கொண்டேயிருந்தார் அவர். நிச்சயமா இப்படியொரு அண்ணன் கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும்’ என்று உடைந்தார் கவுதம் கார்த்திக்.
வீட்டில் நானும் அப்பாவும் பேசினால், இவரைப்பற்றிதான் அதிகம் பேசுவோம். அப்பாவே பார்க்க ஆசைப்பட்ட நடிகர் விஜய் சேதுபதிதான் என்றார் கவுதம்.
மனங்களை கொள்ளையடிக்கிற வித்தையை விஜய் சேதுபதியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்!