யாருதான் கஷ்டப்படல? ஆடியோ விழாவில் விஜய் சேதுபதி அலுப்பு
‘டெஸ்ட் மேட்சா, ட்வென்ட்டி ட்வென்ட்டியா?’ என்பதை காண இன்னும் சில வாரங்கள் காத்திருந்தால் போதும். சுட சுட தயாராகிவிட்டது ‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ படம். வீரா இயக்கியிருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அவருக்கு -முன்னால் பேசிய எல்லாரும் அவரவர்கள் சினிமாவில் நுழைவதற்காகவும் ஒரு இடத்தை பிடிப்பதற்காகவும் அடைந்த கஷ்ட நஷ்டங்களை சொல்லிக் கொண்டேயிருக்க, சட்டென்று பொறி பறக்க விட்டார் விஜய் சேதுபதி. ‘சினிமாவுல நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சேன்னு சொல்லிக்கிறதுல அர்த்தம் இல்ல. யாருதான் கஷ்டப்படல? எல்லாரும்தான் எல்லா வேலையும் கஷ்டப்பட்டு செய்யுறாங்க. நாமும் அப்படி செஞ்சுட்டு போவோமே? அதை ஏன் சொல்லிகிட்டு இருக்கணும்? என்றவர், ‘டைட்டில் நல்லாயிருக்கு’ என்றார் மனப்பூர்வமாக!
அதென்ன இப்படியொரு டைட்டில்? அழகாக விளக்கம் கொடுத்தார் படத்தின் இயக்குனர் வீரா. ‘ஒரு பந்துல நாலு ரன் அடிச்சா இந்தியாவுக்கு வெற்றி. ஒரு விக்கெட்தான் இருக்கு. அந்த விக்கெட் விழுந்தா பாகிஸ்தானுக்கு வெற்றி. டி.வியில் இப்படியொரு மேட்சை பார்த்துகிட்டு இருக்கிற ஒருத்தருக்கு அந்த திக் திக் திக் நிமிஷத்துல நடக்கிற ஒரு திருப்பம்தான் இந்த படத்தின் கதை.. ஹீரோயின் ஹாசிகாதான் இந்த படத்தின் தயாரிப்பாளர்னு ஒரு வதந்தி உலவுது. (கதையை நீங்களாவே ஓப்பன் பண்றீங்களே பிரதர்) உண்மையில் அப்படியெல்லாம் இல்ல. தயாரிப்பாளர் கே.என்.ரவிஷங்கர் சாருக்கு நிறைய பிசினஸ் இருக்கு. அவரால் முழு நேரமும் சினிமாவை கவனிக்க முடியாது. அவருக்கு தெரிந்தவர் என்ற முறையில் ஹாசிகா கொஞ்சம் அக்கறை எடுத்துகிட்டாங்க. அவ்வளவுதான் என்றார் வீரா.
வெகு காலம் கழித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சன் பிக்சர்ஸ்சின் முன்னாள் சி.இ.ஓ சக்சேனா. இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதும் அவர்தான். ரைசிங் சன் பிலிம்ங்கிற பெயரை பார்த்துட்டு நான்தான் இந்த படத்தை தயாரிச்சேன்னு எழுதிடாதீங்க. ரவிஷங்கர் என்னோட நண்பர். தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ணிக் கொடுங்கன்னு சொன்னார். அதனால் செஞ்சு கொடுக்கிறேன். அவ்வளவுதான் என்றார்.