இனிமேதான் என் ஆட்டம் ஆரம்பம்! விஷால் குமுறல்… நடிகர் சங்கமும் நாய் விவகாரமும்!

‘நான் வருவேண்டா’ என்று எந்த நேரத்தில் ‘பூஜை’ ட்ரெய்லரில் குமுற ஆரம்பித்தாரோ? அப்போதிலிருந்து அதே வார்த்தையை வெவ்வெறு காரணங்களுக்காக குமுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் விஷால். சும்மா கிடந்த சூலாயுதத்தை கூர் தீட்டிவிட்டவர்கள் வேறு யாருமல்ல, விஷால் அக்கறையோடு கவனித்துக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத்தின் பில்லர்கள்தான்.

நடிகர் ராதாரவியும், நடிகர் சங்கத்தின் பொருளாளருமான கே.என்.காளையும் திருச்சியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு போயிருந்தார்கள். போன இடத்தில் சங்கத்தில் தங்களுக்கு எதிராக செயல்படுகிற இளம் தலைமுறை நடிகர்களை போட்டு வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்கள். அதுவும் ராதாரவி நடிகர் நாசரை மயிரு… என்றெல்லாம் பேசினாராம். ‘நான் அநாகரிகத்தின் உச்சம். கெட்ட வார்த்தை நிறைய பேசுவேன்’ என்றவர், ‘நடிகன் பிளாக்ல எவ்ளோ வாங்குறான்… ஒயிட்ல எவ்ளோ வாங்குறான்னு எனக்கு தெரியும்’ என்றும் கூறினாராம். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. ‘வர்ற தேர்தலில் எங்களை எதிர்த்து நிற்க நினைக்கிற நாய்களை விரட்டி அடிக்கணும்’ என்றும் பேசியிருக்கிறார். சிவாஜிகணேசன் பற்றி பேசியவர், ‘உலகம் உருண்டைங்கறதே அவருக்கு ரொம்ப லேட்டாதான் தெரியும்’ என்றெல்லாம் எகத்தாளம் செய்தாராம். விஜயகாந்த், ரஜினிக்கும் சேர்த்து பொங்கல் வைத்தாராம்.

தன்னையும் தன்னுடன் கூட்டு சேர்ந்திருக்கும் ஹீரோக்களையும் நாய் என்று குறிப்பிட்ட ராதாரவியை சும்மாவிடப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் விஷால். ‘இதுவரைக்கும் எனக்கு தேர்தலில் நிற்கிற எண்ணம் வந்ததேயில்ல. இப்ப சொல்றேன். வர்ற தேர்தலில் அவங்களை எதிர்த்து நிற்பேன். கண்டிப்பா ஜெயிப்பேன். இனிமேதான் என் ஆட்டத்தை அவங்க பார்க்கப் போறாங்க’ என்கிறார் விஷால். சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்குள், நாலு பேர் மண்டை உடையாமல் இருக்காது போலவே தோன்றுகிறது.

ஆக்ஷன் பிளாக் எப்போ ஆரம்பம் விஷால்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Ulaganayagan Kamal Haasan launching lake cleaning movement as a part of the Clean India Campaign Stills & Press Release

Close