ரஞ்சித் சார்… ரஜினியோட நடிக்கணும்! நச்சரிக்கும் பிரபல இயக்குனரின் அப்பா?
மச்சான் கவுன்சிலராகிட்டா, மாரியாத்தா கோவில் உண்டியலு எனக்குதான் என்று திரியும் ஊரல்லவா இது? தெரிந்த இயக்குனர் படம் இயக்குகிறார். அதுவும் ரஜினி படம். வாயை திறந்து கேட்டுப் பார்ப்போம். வந்தா மல… வரலேன்னா பரவால்ல… என்ற முடிவுக்கு வந்தாராம் அவர். ரொம்ப தைரியமாக வாய் விட்டே கேட்டுவிட்டாராம். அப்படியென்ன கேட்டார்.? “இந்த படத்தில் ரஜினி சாரோட காம்பினேஷன்ல வர்ற மாதிரி ஏதாவது வேஷம் இருந்தா கொடுங்களேன்” என்றுதான். இத்தனைக்கும் ரஞ்சித் நினைத்து வைத்திருந்த கேரக்டருக்கும் இவருக்கும் முக ஒற்றுமை ஒன்றாகவே இருந்ததுதான் பேரதிர்ஷ்டம்.
தன்னை போலவே பிரபலமான ஒரு இயக்குனரின் அப்பாவே வந்து வாய்ப்பு கேட்டதாலும், தனது எண்ணத்திற்கு பொருத்தமாக அவர் இருந்ததாலும் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் ரஞ்சித்.
யாரந்த இயக்குனர்? வேறு யார். கார்த்திக் சுப்புராஜ்தான். ரஜினிக்கு இவரும் ஒரு கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார். ஜிகிர்தண்டா பார்த்த பிறகு இவரை அழைத்து கதை கேட்ட ரஜினி, நல்லாயிருக்கு என்றும் சொல்லி வைத்திருக்கிறார். எப்படியும் தன் மகன் ரஜினியை வைத்து படம் இயக்குவான். அதில் தனக்கு வாய்ப்பு இருக்கும் என்று நம்பிய கார்த்தி சுப்புராஜின் அப்பாவுக்கு, ரஞ்சித்தே ஓ.கே சொன்னதில் திருப்தியோ திருப்தி!