மீனாட்சியை தொடர்ந்து சந்தியாவும் குத்தாட்டம்? ஹையோடா உலகநாதா!
காதல் சந்தியாவை விதி இந்த பாடு படுத்தணுமா? அப்படம் வந்த புதுசில் ஒட்டுமொத்த இளைஞர்களுமே சந்தியாக ராகம் பாடி வந்தார்கள். ஆனால் அதற்கப்புறம் அவர் தேர்வு செய்த படங்கள் காலை வாரிவிட, மூக்கையும் வாரிவிட்டது முக்கியமான ஆபரேஷன் ஒன்று. அதற்கப்புறம் அவரது அழகான முகத்தில் திரளான குழப்பம் வந்து தொலைக்க, ‘சாகாவரம் பெற்ற சந்தியா இளைஞர் மன்றம்’ ஒரே நாளில் கலைக்கப்பட்டது.
மீண்டும் மூக்கில் கத்தி வைக்க விரும்பாத சந்தியா, அப்படியே கரையொதுங்கி மலையாளம் கன்னடம் என்று போய் விட்டார். இருந்தாலும், முதலில் அறிமுகமான தமிழ்ப்பட ஆசை இல்லாமலிருக்குமா? நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கலாம் என்று காத்திருந்தார். வந்தால்தானே? அந்த நேரத்தில் ஒரு பாடலுக்கு ஆட வர்றீங்களா என்ற அழைத்தார்களாம் சில இயக்குனர்கள். ஒரு பாடலுக்கு ஆடப் போனாலும், கதையம்சம் உள்ள படத்தில் ஆடணும் என்ற கொள்கை வைத்திருந்த சந்தியா சமீபத்தில் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
பத்திரிகையாளர் இரா.சரவணன் இயக்கி வரும் கத்துக்குட்டி என்ற படத்திதான் அந்த பாடல். இரவு பாடல் என்பதால் மூன்று நைட்டுகள் முழித்திருந்து நடித்தாராம் சந்தியா. கண்கொட்டாமல் பார்க்க வேண்டியது ரசிகர்களின் கடமை.
வெள்ளக்கார தொரை படத்தில் நடிகை மீனாட்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்போது சந்தியாவும் குத்தாட்டம் போட வந்திருப்பது மார்க்கெட் போன நடிகைகளுக்கு என தனியாக நலவாரியம் அமைத்தால் என்ன என்கிற அளவுக்கு நாட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஹையோடா உலகநாதா…!

